தலைப்புச் செய்திகள்

புதிய அரசியலமைப்பு தொடர்பான விவாதம் ஒத்திவைப்பு

Parliament - 0011புதிய அரசியல் யாப்பு தொடர்பிலான விவாதத்தை, ஒத்திவைப்பதற்கு கட்சித் தலைவர்கள் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

எதிர்வரும் 26 ஆம் திகதி மேற்படி விவாதம் நடைபெறவிருந்தமை குறிப்ப்பிடத்தக்கது.

புதிய அரசியல் யாப்பானது, சட்டபூர்வமான நடைமுறைகளுடனும் நாடாளுமன்ற நிலையியல் கட்டளைச் சட்டத்திற்கு அமைவாகவும் மேற்கொள்ளப்பட வேண்டுமென மக்கள் விடுதலை முன்னணி மற்றும் கூட்டு எதிரணியினர் அண்மைக்காலமாக வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், அண்மையில் முன்னாள் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸின் இல்லத்தில் கூட்டு எதிரணியினர் சந்தித்து, இதுபற்றி தீர்மானமொன்றை எடுத்து கட்சி தலைவர்கள் கூட்டத்தில் அதுகுறித்து தெரிவித்துள்ளனர். இதனையடுத்து குறித்த விவாதத்தை ஒத்திவைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

நாடாளுமன்றத்தை அரசியலமைப்பு பேரவையாக மாற்றும் அரசியல் யாப்பு தொடர்பான யோசனை, கடந்த 09ஆம் திகதி பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் நாடாளுமன்றில் முன்வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, அரசியலமைப்புச் சீர்திருத்தம் தொடர்பாக பொதுமக்களின் கருத்துக்களை உள்வாங்கும் நடவடிக்கையின் முதற்கட்டம், 18ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பிக்கப்பட்டது. இந்நடவடிக்கை  எதிர்வரும் 22ஆம் திகதி வரை இடம்பெறும்.

மக்கள் கருத்தை உள்வாங்கும் நடவடிக்கை கொழும்பு, கொம்பனி வீதியில் அமைந்துள்ள விசும்பாயவின் வைத்தே முன்னெடுக்கப்படுகின்றது. இதற்கிணங்க, காலை 09.30 மணிமுதல் மாலை 4.30 மணிவரை பொது மக்கள் ஆலோசனை வழங்க முடியும் என்று அரசியலமைப்புச் சீர்திருத்தம் தொடர்பாக மக்கள் கருத்துக்களை உள்வாங்கும் குழு ஏற்கெனவே தெரிவித்திருந்தது.

அத்துடன், 0112437676 என்ற தொலைபேசி இலக்கத்தினூடாகவும் 0112328780 என்ற தொலைநகல் இலக்கத்தின் ஊடாகவும் தங்களது கருத்துக்களைப் பதிவு செய்யமுடியும் என தெரிவித்துள்ள அக்குழு, constitutionalreforms@gmail.com  என்ற மின்னஞ்சல் முகவரியூடாகவும் கருத்துக்களை அனுப்பமுடியும் எனவும் அறிவித்துள்ளது.