மாட்டு வண்டி – மோட்டார் சைக்கிள் மோதியதில் ஒருவர் பலி
– பாறுக் ஷிஹான் –
மாட்டு வண்டியுடன் மோதி மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்தார்.
நிந்தவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாட்டுப்பளை பிரதான வீதியில் இச்சம்பவம் நேற்று சனிக்கிழமை (15) அதிகாலையில் இடம் பெற்றது.
வயல் வேலைக்காக சென்று கொண்டிருந்த இரு மாட்டு வண்டிகளுடன் மோட்டார் சைக்கிளில் மோதி, இந்த விபத்து நடந்துள்ளது.
இச் சம்பவத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளம் குடும்பஸ்தர் ஸ்தலத்திலேயே உயிரிழந்தார்.
சாய்ந்தமருது 12 ஐச் சேர்ந்த ஜமால்தீன் ஹாறூன் (வயது 42) என்பவரே விபத்தில் மரணமடைந்துள்ளார். இவர் இரண்டு பிள்ளைகளின் தந்தையாவார்.
விபத்து நடைபெற்ற இடத்துக்கு வருகை தந்த சம்மாந்துறை நீதிவான் நீதிமன்றத்தின் பதில் நீதிபதி விசாரணைகளை மேற்கொண்டார். இதன் பின்னர் மரணமடைந்தவரின் பிரேதம் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு பிரேத பரிசோதனையின் பின்னர் மாலை உறவினர்களிடம் கையளிக்கப்பட்டது.
இந்தப் பகுதியில் அடிக்கடி விபத்துக்கள் நிகழ்கின்றமை குறிப்பிடத்தக்கது.