இந்தியப் பிரதமர் மோடியை அவமதித்த வழக்கில், ராகுல் காந்திக்கு இரண்டு வருடம் சிறைத் தண்டனை வழங்கி நீதிமன்றம் உத்தரவு

இந்திய காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சூரத் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. எனினும், அவருக்கு உடனடியாக பிணை வழங்கப்பட்டுள்ளது.
04 ஆண்டுகள் முன்பு தொடரப்பட்ட அவதூறு வழக்கில் இந்தத் தீர்ப்பை வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த நிலையில் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய ராகுல் காந்திக்கு 30 நாட்கள் அவகாசமும் வழங்கப்பட்டுள்ளது. நீதிமன்றத்தில் ராகுல் காந்திக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்று மனுதாரரின் வழக்கறிஞர் கோரியிருந்தார்.
இந்த வழக்கு, 2019ஆம் ஆண்டில் மோடி குடும்பப் பெயர் தொடர்பாக அவர் தெரிவித்த கருத்துகளுடன் தொடர்புடையது. “எல்லா திருடர்களுக்கும் மோடி என்ற குடும்பப்பெயர் இருப்பது எப்படி” என்று ராகுல் காந்தி பேசியிருந்தார்.
வியாழனன்று நடைபெற்ற வழக்கு விசாரணையின்போது, சூரத் நீதிமன்றத்தில் ராகுல் காந்தி நேரில் ஆஜராகி இருந்தார். விசாரணையின்போது, எந்த சமூகத்தையும் தனது பேச்சு மூலம் புண்படுத்த விரும்பவில்லை என்று – ராகுல் காந்தி கூறியதாக பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவரின் வழக்கறிஞர்கள் குழு தெரிவித்தது.
தண்டனை அறிவிக்கப்பட்டதும், “எனது மதம் சத்தியம் மற்றும் அகிம்சையை அடிப்படையாகக் கொண்டது, சத்தியம் என் கடவுள், அகிம்சை அதை அடைவதற்கான வழிமுறை” என்ற மகாத்மா காந்தியின் கருத்தை ராகுல் காந்தி தனது டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார்.
கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலின்போது கர்நாடகாவில் பிரசாரம் மேற்கொண்ட ராகுல் காந்தி, கோலார் பகுதியில் பேசும்போது, ‘ஏன் அனைத்து திருடர்களும் மோடி’ என்ற குடும்பப் பெயரையே கொண்டுள்ளனர்?` என்று கூறியதாக தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பாக இந்திய குற்றவியல் சட்டம் 499, 500 ஆகிய பிரிவுகளின் கீழ், ராகுல் காந்தி மீது வழக்கு தொடரப்பட்டது. இந்திய தண்டனைச் சட்டத்தின் 499வது பிரிவு, குற்றவியல் அவதூறு வழக்குகளில் அதிகபட்சமாக இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனையை வழங்குகிறது.
ராகுல் காந்தி எம்பியாக இருப்பதால் தற்போதைய சூழலில் அவருக்கு எவ்வித சிக்கலும் இல்லை. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அவர்களுக்கு 30 நாட்கள் அவகாசம் உள்ளது.
நன்றி: பிபிசி தமிழ்