பள்ளிவாசல்களில் உலக அறிவும், வழிகாட்டுதல்களும் வழங்கப்படுதல் அவசியம்: அக்கரைப்பற்று பெரிய பள்ளிவாசல் கந்தூரி வைபவத்தில் தலைவர் சபீஸ் உரை
பள்ளிவாசல்களில் ஆத்மீகக் கல்வி மட்டுமன்றி – உலக அறிவுடன், இளைஞர்களுக்கான வழிகாட்டுதல்களும் வழங்கப்படுவது அவசியம் என, அக்கரைப்பற்று ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் தலைவரும் அக்கரைப்பற்று மாநகர சபை உறுப்பினரும் ‘கிழக்கின் கேடயம்’ அமைப்பின் தலைவருமான எஸ்.எம். சபீஸ் வலியுறுத்தினார்.
அக்கரைப்பற்று பெரிய பள்ளிவாசலில் இன்று (19) நடைபெற்ற ஸஹீஹுல் புஹாரி 66ஆவது பாரயன நிகழ்வுடன் கூடிய கந்தூரி வைபவத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் இதனைக் கூறினார்.
இந் நிகழ்வில் ஊரின் மூத்த உலமாக்கள், சமூக முக்கியஸ்தர்கள் மற்றும் பொது மக்கள் எனப்பலர் கலந்து கொண்டனர்.
முப்பது தினங்கள் ஓதப்பட்டு வந்த இந்த மஜ்லிஸ் – இன்று கந்தூரி வைபவத்துடன் நிறைவு பெற்றது. இது 66ஆவது நிகழ்வாகும்.
கொட்டும் மழைக்கு மத்தியிலும் பெருந்திராளான மக்கள் இதில் கலந்து கொண்டு கந்தூரியைப் பெற்றுக் கொண்டனர்.
இங்கு உரையாற்றிய சபீஸ் மேலும் கூறுகையில்;
“அலைக்கழியும் எமது இளைஞர்களை பள்ளிவாசல்களுடன் இணைக்க எம்மிடம் பல திட்டங்கள் உள்ளன. மார்க்க உபன்னியாசங்களை மேற்கொள்வது மட்டுமன்றி பக்தாதுக்கு இணையான நூலகம் ஒன்றை அமைக்கவும் தீர்மானித்திருக்கிறோம்”.
“அல்லாஹ், ரஸூலின் வழிகாட்டுதலின் மூலம் – எமது இளைஞர்களை வளர்த்தெடுப்பதில், பள்ளிவாசல்களைத் தவிர வேறு எந்தத் தளங்களுக்கும் பிரதான இடமில்லை. இதைக் கருத்திற்கொண்டு எமது எதிர்கால செயற்பாடுகள் அமையும்” என்றார்.