கோட்டாவினால் ஏற்பட்ட 5978 மில்லியன் ரூபா நட்டம்: கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கையில் அம்பலம்
கோட்டாபய ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் ஜப்பானின் நிதியுதவியுடன் கூடிய இலகு ரயில் போக்குவரத்து திட்டத்தை நிறுத்தியதால், நாட்டுக்கு 5,978 மில்லியன் ரூபா நட்டமேற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை கணக்காய்வாளர் நாயகத்தின் விசேட கணக்காய்வு அறிக்கையின் மூலம் இந்த தகவல் வெளியாகியுள்ளது.
2020 செப்டெம்பர் 21ஆம் திகதி அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு, அப்போதைய ஜனாதிபதி செயலாளரால் வழங்கப்பட்ட கடிதத்தைத் தொடர்ந்து, ஜப்பானின் இந்த திட்டம் பொருத்தமான செலவு குறைந்த போக்குவரத்து தீர்வாக இல்லை என்று குறிப்பிட்டு, அது இடைநிறுத்தப்பட்டது.
ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம், 12 வருட சலுகைக் காலம் உட்பட 40 வருட காலப்பகுதியில் இந்த திட்டத்துக்கான கடனைச் செலுத்தும் வசதியை வழங்கியிருந்தது.
இதற்கான வருடாந்த வட்டி வீதம் 0.1 சதவீதமாக இருந்தது.
இதேவேளை 2021 டிசம்பர் 31ஆம் திகதிக்குள் இந்த திட்டம் தொடர்பில் 604 மில்லியன் ரூபாவை நிலுவையாக செலுத்தவேண்டியிருந்தது.
எனினும் இன்னும் அது செலுத்தப்படவில்லை.