மின் கட்டண அதிகரிப்பு தொடர்பில், மின்சார சபைத் தலைவர் தகவல்

இலங்கை மின்சார சபை – பாரிய நிதி நெருக்கடியில் மூழ்கியுள்ள நிலையில், மின்சார சபையின் செலவை ஈடுகட்ட, மின் நுகர்வு கட்டணத்தை அதிகரிக்க வேண்டும் என இலங்கை மின்சார சபையின் தலைவர் நலிந்த இளங்ககோன் தெரிவித்துள்ளார்.
ஒரு அலகு மின்சாரத்தை குறைந்த விலையில் மின்சார சபை வழங்கியதாலும், செலவு அதிகரிப்புக்கு இணையாக 2013 ஆம் ஆண்டு முதல் முறையாக மின்சார கட்டணத்தை அதிகரிக்காததாலும் இந்த நிலை ஏற்பட்டுள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.
மின்சார சபையின் ஏனைய செலவுகளை குறைக்க, மின்சக்தி அமைச்சர் பணிப்புரை வழங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
“அடுத்த ஆண்டு முதல் 24 மணி நேர மின்சாரம் வழங்க அரசு முடிவு செய்துள்ளதால், கட்டணத்தை உயர்த்தாமல் தொடர்ந்து மின்சாரம் வழங்க முடியாது. மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மற்றும் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு இணைந்து நடைமுறைப்படுத்த வேண்டும்” என்றார்.
மின் உற்பத்திக்குத் தேவையான நிலக்கரியை திட்டமிட்டபடி வழங்க உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், நிலக்கரி விநியோகத்தில் பாரிய சிக்கல்கள் எதுவும் இல்லை என்றும் மின்சார சபைத் தலைவர் மேலும் தெரிவித்தார்.