டொக்டர் ஷாஃபியை மீளப் பணிக்கு அழைக்க தீர்மானிக்கவில்லை: சுகாதார சேவைகள் ஆணைக்குழு
சட்டவிரோத கருத்தடை சத்திரசிகிச்சைகளை மேற்கொண்டதாக குற்றம் சுமத்தப்பட்ட குருநாகல் போதனா வைத்தியசாலையின் டொக்டர் ஷாஃபி ஷிஹாப்தீனை மீள பணிக்கு அழைப்பதற்கு இதுவரை தீர்மானிக்கவில்லையென அரச சேவை ஆணைக்குழுவின் சுகாதார சேவைகள் குழு தெரிவித்துள்ளது.
சுகாதார செயலாளரின் பணிப்புரையின் பேரில், தாபனங்கள் சட்டத்தின் 12ஆவது அத்தியாயத்தின் 22 சரத்துக்கமைய, 2019 மே 11 ஆம் திகதி முதல் வைத்தியர் ஷாஃபி ஷிஹாப்தீன் கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ளார்.
எனினும், இது தொடர்பான ஆரம்பக்கட்ட விசாரணைகளுக்காக குழுவொன்றை நியமித்து கூடிய விரைவில் அறிக்கையொன்றை அனுப்புமாறு அறிவித்திருந்த போதிலும் அது தொடர்பான அறிக்கை தமக்கு கிடைக்கவில்லை என அரச சேவை ஆணைக்குழுவின் சுகாதார சேவை குழுவின் செயலாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, வைத்தியர் ஷாஃபி ஷிஹாப்தீனின் சம்பள நிலுவையை செலுத்தி மீண்டும் அவரை பணியில் அமர்த்துமாறு குருநாகல் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளருக்கு சுகாதார அமைச்சின் செயலாளர் எஸ். எச். முணசிங்க, கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார்.
தொடர்பான செய்தி: டொக்டர் ஷாஃபியை, கட்டாய விடுமுறைக்கால சம்பளத்தை வழங்கி பணியில் அமர்த்துமாறு பணிப்புரை