1938க்கு தினமும் 500 அழைப்புகள்; அதிகமானவை பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறை பற்றியவை

🕔 November 19, 2021

சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்தின், பெண்கள் உதவி மத்திய நிலையத்தினுடைய 1938 என்ற தொலைபேசி இலக்கத்துக்கு நாளொன்றுக்கு சுமார் 400 முதல் 500 தொலைபேசி அழைப்புக்கள் வருவதாக அந்த உதவி மத்திய நிலையத்தின் அதிகாரியான மானெல் ஜயமான்ன தெரிவித்துள்ளார்.

உள்வரும் அழைப்புகளில் 50 வீதமானவை பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறை தொடர்பானவை என்றும், பெண்களுக்கு எதிரான பிற வன்முறைகள் குறித்து சுமார் 80 முதல் 100 முறைப்பாடுகள் வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

குடும்பங்களில் நிலவும் பொருளாதாரச் சிக்கல்கள் மற்றும் ஆண்கள் போதைப்பொருளுக்கு அடிமையாகி இருப்பது போன்ற காரணங்களால் இதுபோன்ற முறைப்பாடுகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

“கொவிட் தொற்று காரணமாக பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்த காலங்களில் இவ்வாறான அழைப்புகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளன. ஒக்டோபர் மாதத்தில் மாத்திரம் சுமார் 4,000 அழைப்புகள் கிடைத்துள்ளன.

இந்த முறைப்பாடுகளின் தன்மை குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குத் அறிவிக்கப்படுகின்றன. அதன் பின்னர் அவர்கள் குடும்ப ஆலோசனைச் சேவைகள் மற்றும் போதைப் பழக்கத்துக்கு அடிமையானவர்களுக்கான புனர்வாழ்வு செயல்முறை என்பவற்றுக்கு ஆலோசனைகள் வழங்குகின்றனர்” எனவும் அவர் கூறினார்.

அத்துடன், பாரிய அசம்பாவிதங்கள் ஏற்படுமிடத்து, பொலிஸாரின் உதவியுடன் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மகளிர் உதவி மையத்தின் அதிகாரியான மானெல் ஜயமான்ன மேலும் தெரிவித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்