கொவிட் தொற்றாளர்களுக்கு வீட்டில் வைத்து சிகிச்சை: நாடு முழுவதும் அமுல்

🕔 August 9, 2021

கொவிட் தொற்றாளர்களை வீட்டில் வைத்து சிகிச்சையளிக்கும் நடைமுறை இன்று (09) தொடக்கம் ஆரம்பமாகிறது.

இதன் முதற் கட்டமாக மேல் மாகாணத்தில் மட்டுமே நடைமுறைப்படுத்தப்பட்டு வந்த இந்த முறை, இன்று முதல் நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன் அடிப்படையில் 02 முதல் 65 வயதிற்குட்பட்ட நபர்களுக்கு, அவர்களுக்கு தென்படும் அறிகுறிகளுக்கு அமைய, மருத்துவ மேற்பார்வையின் கீழ் – வீட்டில் வைத்து சிகிச்சை வழங்கப்படும்.

நாட்டில் நாள்தோறும் கொவிட் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாலும், வைத்தியசாலைகளில் கூட்டம் அதிகமாக இருப்பதாலும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

பிசிஆர் அல்லது அன்ரிஜன் பரிசோதனைக்குப் பிறகு, கொவிட் தொற்று இருப்பது கண்டறியப்பட்ட பின், நோயாளர்கள் மருத்துவ அதிகாரிகளால் பரிசோதிக்கப்பட்டு – வீட்டிலேயே சிகிச்சை பெற பரிந்துரைக்கப்பட்டுள்ளார்கள்.

மேலும் மருத்துவ அதிகாரிகளால் வழங்கப்படும் சுகாதார வழிகாட்டுதல்களின் கீழ், நோயாளர்களுக்கு வீட்டில் சிகிச்சை அளிக்க ஏற்பாடுகள் செய்யப்படுவதாகவும், தொலைபேசி மூலம் பதிவு செய்த பிறகு, நோயாளர்கள் மருத்துவ அதிகாரிகளின் மேற்பார்வையில் வைக்கப்படுவார் என்றும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

பொதுமக்களின் நலன் கருதி 24 மணி நேரமும் தொடர்பு கொள்ள 1390 என்ற எண் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்