ரஞ்சனின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி காலி; சபாநாயகர் அறிவிப்பு: வெற்றிடத்தை நிரப்புபவரின் பெயரும் வெளியானது
ரஞ்சன் ராமநாயக்கவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி காலியாகியுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாபா அபேகுணவர்தன அறிவித்துள்ளார்.
நாடாளுமன்ற அமர்வு இன்று புதன்கிழமை ஆரம்பித்த போது, அவர் இந்த விடயத்தை தெரியப்படுத்தினார்.
சட்ட ஆலோசனைகளை கருத்திற் கொண்டு ரஞ்சன் ராமநாயக்கவின் நாடாளுமனற உறுப்பினர் பதவி காலியாகியுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட முன்னாள் ராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு உச்ச நீதிமன்றம் நான்கு வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்தமை குறிப்பிடத்தக்கது.
இடத்தை நிரப்புபவர் யார்?
இந்த நிலையில் வெற்றிடமாகியுள்ள ரஞ்சன் ராமநாயக்கவுக்கு அடுத்த நிலையில் ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் பட்டியலில் அஜித் மன்னப்பெரும உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஐக்கிய மக்கள் சக்தி சார்பாக கம்பஹா மாவட்டத்தில் போட்டியிட்ட அஜித் மன்னப்பெரும, 47,212 விருப்பு வாக்குகளைப் பெற்று, ஐந்தாவது இடத்துக்கு தெரிவாகியிருந்தார்.
எனவே, ரஞ்சன் ராமநாயக்கவின் இடத்துக்கு அஜித் மன்னப்பெரும நியமிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.