புர்கா, நிகாப் தடை: அரசாங்கம் தீர்மானம் எடுக்கவில்லை என, வெளிவிவகார அமைச்சு தெரிவிப்பு

🕔 March 16, 2021

புர்கா மற்றும் நிகாப் அணிவதைத் தடை செய்வதற்கான தீர்மானம் அரசாங்கத்தால் எடுக்கப்படவில்லை என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

ஊடக அறிக்கை ஒன்றின் ஊடாக வெளிவிவகார அமைச்சு இதனைக் குறிப்பிட்டுள்ளது.

இலங்கையில் புர்கா மற்றும் நிகாப் அணிவதைத் தடை செய்யப்போவதாக அண்மையில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்திருந்தார்.

இருந்த போதும், இதுபோன்ற தடையை விதிப்பதற்கான தீர்மானம் அரசாங்கத்தால் மேற்கொள்ளப்படவில்லை என்றும், இது ஒரு முன்மொழிவு மாத்திரமேயாகும் என்றும், இது கலந்துரையாடல்களின் கீழ் உள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சரின் செயலாளர் அட்மிரல் பேராசிரியர் ஜயநாத் கொலம்பகே குறிப்பிட்டுள்ளார்.

‘ஈஸ்டர் ஞாயிறு தினத் தாக்குதல்கள் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் ஆலோசனைகளுக்கு அமைவாக, தொடர்ந்தும் தேசிய பாதுகாப்பு தொடர்பில் தேவைப்படும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் அடிப்படையில் இந்தப் பிரேரணை உருவாக்கப்பட்டுள்ளது.

சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினருடனுமான ஒரு பரந்த உரையாடலை அரசாங்கம் ஆரம்பிப்பதுடன், தேவையான ஆலோசனைகள் நடைபெறுவதற்காகவும், ஒருமித்த கருத்தை எட்டுவதற்காகவும் போதுமான நேரம் எடுத்துக் கொள்ளப்படும்’ எனவும், வெளிநாட்டு அமைச்சின் ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்