அட்டாளைச்சேனை கோணாவத்தை ஆற்றை பாதுகாக்கும் பணி: சிரமதானம் மூலம் ஆரம்பம்
🕔 March 13, 2021
அட்டாளைச்சேனை கோணாவத்தை ஆற்றையும், அதன் கரைகளையும் சுத்தம் செய்து – அழகு படுத்தி, ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து ஆற்றை மீட்டெடுக்கும் நோக்கில், இன்று சனிக்கிழமை கோணாவத்தை ஆற்றங்கரையின் ஒரு பகுதியிலல் சிரமதான நடவடிக்கையொன்று நடைபெற்றது.
கோணாவத்தை ஆற்றை பதுகாப்பதற்கான அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்வில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
கோணாவத்தை ஆற்றை பதுகாப்பதற்கான அமைப்பின் தலைவர் டொக்டர் மனாப் சரீப் வழிநடத்தலில் நடைபெற்ற இந்த சிரமதான நடவடிக்கையில், அக்கரைப்பற்று பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள், 241ஆவது பிரிவு ராணுவத் தலைமையக உத்தியோகத்தர்கள், அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர், பிரதேச செயலகத்தின் பல்நோக்கு அபிவிருத்தி செயலணி பயிலுநர்கள், விளையாட்டு கழகங்களின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் இந்த சிரமதானத்தில் பங்கேற்றனர்.
ஆற்றங்கரையை சுத்தப்படுத்தி – மகிழ்ச்சிகரமான இடமாக மாற்றுவதோடு, நீண்ட காலமாக ஆற்றங்கரை சட்டவிரோதமாக அபகரிக்கப்படுவதை முடிவுக்குக் கொண்டுவருவதே இந்த நடவடிக்கையின் நோக்கம் என, இதன் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
அல் ஜன்னா பாடசாலைக்கு முன்பாகவுள்ள ஆற்றங்கரையில் இன்று சிரமதானம் இடம்பெற்றதோடு, அந்த இடத்தில் பொதுமக்கள் ஓய்வெடுக்கும் வகையிலான கொங்றீட் கதிரை, மேசைகள் நிர்மாணிக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.