சாய்ந்தமருது நபரின் உடலை தகனம் செய்யாமல் வைத்திருக்குமாறு, கல்முனை மேல் நீதிமன்றம் உத்தரவு
– ஏ.எல். ஆஸாத் (சட்டத்தரணி) –
கொரோனா பாதிப்பு காரணமாக மரணமடைந்ததாகக் கூறப்படும் சாய்ந்தமருதைச் சேர்ந்த எம்.எம். ஆதம்பாவா என்பவரின் உடலை எதிர்வரும் மார்ச் 18 ஆம் திகதி வரை தகனம் செய்யாமல், அவ்வாறாவே வைத்திருக்க வேண்டும் என, கல்முனை மேல் நீதிமன்றம் இன்று செவ்வாய்கிழமை உத்தரவிட்டுள்ளது.
குறித்த உடல் அம்பாறை பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
என்ன நடந்தது?
சாய்ந்தமருதைச் சேர்ந்த எம்.எம். ஆதம்பாவா என்பவர், கடந்த 12.02.2021ம் திகதி அம்பாறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் மரணமடைந்தார்.
இந்த நிலையில் குறித்த நபருக்கு கொரோனா தொற்றுள்ளதாக வைத்தியசாலை நிருவாகத்தால் கூறப்பட்ட போதும், அவருக்கு அவ்வாறான தொற்று ஏற்படக்கூடக்கூடிய எந்த சந்தர்பமும் இல்லை என்ற காரணத்தினால், அவரின் மரணத்தில் வலுவான சந்தேகம் உள்ளதாக அவரது குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்தனர்.
இதனையடுத்து நேற்று திங்கட்கிழமை இது தொடர்பான வழக்கு கல்முனை நீதவான் நீதிமன்றில் அழைக்கப்பட்ட போது, மரண விசாரணை இன்றி வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டிருந்தது.
மேல் நீதிமன்றம் உத்தரவு
இது தொடர்பில் இன்று செவ்வாய்கிழமை கல்முனை மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட மீளாய்வு மனுவில், சிரேஷ்ட சட்டத்தரணி எஸ்.எஸ். அப்பாசி, சட்டத்தரணிகளான முகைமீன் காலித், சஞ்சித், ஜெளபீர் மற்றும் றதீப் அகமட் அகியோர் ஆஜராகி, குறித்த ஜனாஸா தொடர்பில் நீண்ட வாதங்களை முன்வைத்திருந்தனர்.
மனுதாரர் சார்பாக சட்டத்தரணிகளால் செய்யப்பட்ட சமர்ப்பணத்தினை ஏற்றுக்கொண்ட கல்முனை மேல்நீதிமன்ற நீதிபதி ஶ்ரீநிதி நந்தசேகரம்; அம்பாறை பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருக்கும் குறித்த ஜனாஸாவை எதிர்வரும் மார்ச் 18ஆம் திகதி வரை தகனம் செய்யாமல், அவ்வாறாவே வைத்திருக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பிதிருந்ததுடன் பிரதிவாதிகளுக்கு அறிவித்தல் வழங்கினார்.