உடதலவின்ன படுகொலைக்கு 19 வருடங்கள்: மு.காங்கிரஸின் பெயரால் உல்லாசம் அனுபவிப்போருக்கு தெரியுமா இது?

🕔 December 5, 2020

– முகம்மத் இக்பால் –

முஸ்லிம் காங்கிரசின் வளர்ச்சிக்காக இரத்தம் சிந்தி, உயிரை அர்ப்பணித்து, சொத்துக்களை இழந்தவர்கள் ஏராளம். பொருளார நிலையில் அடிமட்டத்தில் இருந்த பலர், இன்று கோடீஸ்வரர்களாகவும், அந்தஷ்தில் உயர்ந்தவர்களாகவும் இருப்பதற்கு கட்சியின் தொண்டர்கள்தான் பிரதான காரணமானவர்கள்.

முஸ்லிம் காங்கிரஸின் பயணத்தில் உடதலவின்ன படுகொலைக்கு இன்று 19 வருடங்கள் கடந்துள்ளன. கட்சியினால் நன்றாக அனுபவித்து இன்று உல்லாசமாக வாழ்ந்துகொண்டிருக்கின்ற எத்தனை பேருக்கு இது நினைவிருக்கின்றதோ தெரியவில்லை.

கண்டி மாவட்டம் – உடதலவின்ன பிரதேசத்தில் 2001.12.05 தேர்தல் தினமான நோன்பு பத்தொன்பதில், முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீமுக்காக தேர்தல் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த பன்னிரெண்டு முஸ்லிம் காங்கிரஸ் தொண்டர்கள் சுட்டு கொலை செய்யப்பட்டார்கள்.  

முஸ்லிம்கள் மத்தியில் தப்போது பல கட்சிகள், தலைவர்கள் இருந்தாலும், அன்று இவர்கள் அனைவரும் முஸ்லிம் காங்கிரஸை சேர்ந்தவர்களாக இருந்தனர்.

2001ஆம் ஆண்டு – அன்றைய ஆட்சி கவிழ்ப்புக்கு ரஊப் ஹக்கீம் உடந்தையாக இருந்தார். அந்த நிலை – திடீர் பொதுத் தேர்தலுக்கு வழிவகுத்தது. அதனால் ஹக்கீமை பழி வாங்கும் நோக்கிலேயே இந்த படுகொலை நடைபெற்றதாக அன்றைய பத்திரிகைகளில் செய்திகள் வெளியாகி இருந்தன.

மாவட்ட கச்சேரிக்கு எடுத்துச் செல்லப்படும் வாக்கு பெட்டிகளை கண்காணிக்கும் பொருட்டு, பதின்மூன்று தொண்டர்கள் டொல்பின் வேன் ஒன்றில், வாக்குப்பெட்டிகளுடன் சென்ற பஸ்வண்டியினை பின்தொடர்ந்தார்கள். இவர்கள் சென்ற வாகனத்தில் இடநெருக்கடி காரனமாக ஒருவர் இடையில் இறங்கி விட்டார்.

ரமழான் மாதம் என்பதனால், தாங்கள் நோற்ற நோன்பினை துறப்பதற்கு தங்களுக்கு அவகாசம் இருக்காது என்றும், இது தங்களது இறுதிப்பயணம் என்றும் அந்த கட்சித் தொண்டர்கள் ஊகித்திருக்க மாட்டார்கள்.

வாக்குப் பெட்டிகளை எடுத்துச் சென்ற பஸ் வண்டியை பின்தொடர்ந்தவாறு சென்று கொண்டிருக்கையில், சிவில் உடையில் ஆயுதம் தரித்த சிங்கள காடையர்கள் சிலர், முஸ்லிம் காங்கிரஸ் தொண்டர்கள் பயணித்த வாகனத்தினை பின்தொடர்ந்து அச்சுறுத்தல் விடுத்தார்கள்.

அப்போது நிராயுதபாணிகளான அவர்கள் – அந்த நிலைமையில் தங்களை காப்பாற்றிக்கொள்ளும் பொருட்டு குறுக்குப்பாதையூடாக கண்டி கச்சேரியை அடைவதற்கு வாகனத்தைச் செலுத்தினர். சன நடமாட்டம் இல்லாத அந்த பாதை, பின் தொடர்ந்து வந்த ஆயுததாரிகளுக்கு மிகவும் சாதகமாக அமைந்தது.

முஸ்லிம் காங்கிரஸ் தொண்டர்களின் வாகனத்தினை நோக்கி ஆயுததாரிகள் துப்பாக்கி பிரயோகம் செய்தனர். இதனால் தொடர்ந்து வாகனத்தினை ஓட்டமுடியாமையினால் ஒரு மின் கம்பத்தில் மோதுண்டு வாகனம் நிறுத்தப்பட்டது.

பின்பு வாகனத்தினை ஆயுததாரிகள் சுற்றி வளைத்துக்கொண்டனர். தங்களது மனித வேட்டை இவ்வளவு இலகுவாக அமையும் என்று அவர்கள் நினைத்திருக்க மாட்டார்கள். வேனில் இருந்தோர் எவரும் தப்பிச்செல்ல முடியாத நிலைமை அங்கு காணப்பட்டது.

பின்பு வேனில் இருந்த ஒவ்வொருவரையும் அடித்து கொடுமைப்படுத்தி விட்டு, வாகனத்தில் இருந்து வெளியே எடுத்து தங்களது துப்பாக்கியால் ஒவ்வொருவராக சுட்டார்கள். அதில் அஸ்வர் என்னும் சகோதரரின் வாய்க்குள் துப்பாக்கியை வைத்து சுட்டதில் அவரது தலையின் பின்பக்கம் சிதறியது.

அனைவரும் கொல்லப்பட்டு விட்டார்கள் என்பதனை உறுதிப்படுத்திய பின்பு, வாகனத்துக்குள் வெடிகுண்டினை பொருத்திவிட்டு, கொலைகாரர்கள் அவ்விடத்திலிருந்து தப்பிச் சென்றார்கள். இந்த சம்பவம் நடைபெறும்போது மாலை ஐந்து மணி.

இந்த சம்பவத்தின் பிரதான கொலை சந்தேக நபர்களாக அன்றைய பாதுகாப்பு பிரதி அமைச்சர் அனுருத்த ரத்வத்தவும், அவரின் புதல்வர்களான லொகான் ரத்வத்த, சாணுக ரத்வத்த ஆகியோரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்கள். ஆயினும் இறுதியில் இம்மூவரும் நிரபராதிகள் என்று நீதிமன்றத்தினால் தீர்ப்பளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டார்கள். 

முஸ்லிம் காங்கிரஸ் வரலாற்றில் இது ஓர் துன்பகரமான நிகழ்வாகும். இவ்வாறான சம்பவங்களை கட்சியின் தலைவர் உட்பட இன்று கட்சியின் பெயரால் உல்லாசம் அனுபவித்து வருகின்ற எத்தனை பேர்கள் நினைவில் வைத்துள்ளார்கள்?

Comments

புதிது பேஸ்புக் பக்கம்