மஹர சிறைச்சாலையில் 08 பேர் பலி; கொரோனா அச்சம் காரணமாகவே கைதிகள் தப்பிக்க முயற்சித்தனர் என தகவல்
மஹர சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளின் குடும்பத்தவர்கள் பெருமளவில் சிறைச்சாலை முன்பாக திரண்டுள்ளனர்.
சிறைச்சாலைக்கு வெளியே 100க்கும் மேற்பட்டவர்கள் காண்பபடுகின்றனர் என்றும் அவர்கள் தங்கள் குடும்பத்தவர்களை சந்திப்பதற்கு அதிகாரிகள் அனுமதி வழங்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்து வருகின்றனர் எனவும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மஹர சிறையிலிருந்து காயமடைடந்தவர்களையும் கைதிகளையும் கொண்டு செல்லும் வாகனங்களை பார்த்ததும் குடும்பத்தவர்கள் கதறியழுவதையும் சீற்றமடைவதையும் காண்பிக்கும் வீடியோக்கள் வெளியாகியுள்ளன.
மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மையை தொடர்ந்து ஏற்பட்ட மோதலில் இதுவரை 08 பேர் உயிரிழந்துள்ளதாக சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
அதேவேளை 50 பேர் வரை இந்த கலகத்தில் காயமடைந்துள்ளனர்.
மஹர சிறைச்சாலையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்திருந்த நிலையிலேயே இந்த அமைதியின்மை ஏற்பட்டதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய தெரிவித்துள்ளார்.
மஹர சிறைச்சாலையில் நேற்றைய தினம் புதிதாக 183 கைதிகளுக்கு கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து, அங்கு தடுத்து வைத்திருந்த கைதிகள் சிலர் தப்பிச் செல்ல முயற்சித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்த நிலையில், கைதிகளுக்கும், சிறைச்சாலை அதிகாரிகளுக்கும் இடையில் மோதல் ஏற்பட்ட மோதலின் போது, சிறைச்சாலை அதிகாரிகள் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டிருந்தனர்.