இஸ்லாத்தைச் சொல்லி, பல கோடி ரூபாய் மோசடி செய்த நிதி நிறுவனம்; முறைப்பாடு செய்தும் பலன் இல்லை: பாதிக்கப்பட்டோர் தெரிவிப்பு

🕔 October 5, 2020

– பாறுக் ஷிஹான், நூருள் ஹுதா உமர் –

‘பிரிவேல்த் குளோபல்’ நிதி நிறுவனம் நாடளாவிய ரீதியில் 1200 கோடி ரூபாயை மோசடி தொடர்பில், உரிய  அதிகாரிகள் பொலிஸாருக்கு  தெரியப்படுத்தியும் எவ்வித பலன்மிக்க நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என்றுபாதிக்கப்பட்டவர்கள் குற்றஞ்சாட்டினர்.

‘பிரிவேல்த் குளோபல்’ நிதி நிறுவனம் மேற்கொண்ட நிதி மோசடி தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் நடத்திய செய்தியாளர் சந்திப்பு சாய்ந்தமருதில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்றது.

இதன்போதே அந்நிறுவனத்தில் பண வைப்புச் செய்து ஏமாற்றப்பட்டவர்கள் மேற்படி குற்றச்சாட்டை முன்வைத்தனர்.

அவர் மேலும் தெரிவிக்கையில்;

“நாட்டின் சில பகுதிகளில் கிளைகளைக் கொண்டு இயங்கி வந்த குறித்த நிதி நிறுவனம், கடந்த 06 வருடங்களாக கிழக்கு மாகாணம் உள்ளடங்கலாக கிளைகளை ஆரம்பித்து இஸ்லாத்தை முன்னிறுத்தி சில மௌலவிகளின் ஆசிர்வாதத்துடன் எமது மக்களை பகடைக்காய்களாக்கி ஏமாற்றியுள்ளது.

இதனால்  இந்நிறுவனத்தின் கிளைகளில் பண வைப்பு செய்தவர்கள்   பாதிக்கப்பட்டுள்ளனர்.

குறிப்பாக கிழக்கின் முக்கிய நகரங்களில் கிளைகளை கொண்டு இயங்கிய இந்நிறுவனம்  கல்முனை, மருதமுனை, சம்மாந்துறை மற்றும்  பொத்துவில் உள்ளிட்ட பிரதேசங்கள் முழுவதிலும் மொத்தமாக 200 கோடி ரூபாயை தற்போது மோசடி செய்துள்ளதுடன் நாடளாவிய ரீதியில் 1200 கோடி ரூபாய் அளவில் அவர்கள் மோசடி செய்துள்ளனர்

அத்துடன் இந்த விடயம் தொடர்பில்  அதிகாரிகள்  பொலிஸ் அதிகாரிகள் என பலருக்கு  அறிவித்தும்  எவ்வித பலன்மிக்க நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. மேலும் கடந்த ஒரு வருடகாலமாக எந்தவித முதலீட்டு லாபங்களையோ அல்லது எங்களின் முதலீட்டையோ தராமல் ஏமாற்றி வருகிறார்கள்.

இது தவிர பாதிக்கப்பட்டவர்களுக்கு பணத்தை மீள வழங்குவதற்காக குறித்த நிறுவனம் வழங்கிய காசோலைகள் யாவும் – மூடப்பட்ட கணக்கின் காசோலை என அறிய வந்துள்ளது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் கூட எமது பணத்தை பயன்படுத்தி அவர்கள் போட்டியிட்டுள்ளனர்.

இந்நிறுவனம் மத்திய வங்கியில் பதிவு செய்யப்படாமல் இயங்கியதை அறிந்து, அது குறித்து  விசாரித்த போது, மத்திய வங்கியில் பதிவு செய்தால் வாடிக்கையாளர்களுக்கு லாபம் கூடுதலாக வழங்க முடியாது என்று கதையளந்தார்கள். இதற்கு இல்லாமிய சில வரைவிலக்கணங்களை உதாரணம் காட்டி சில மௌலவிகளின் உடந்தையுடன் எம்மை ஏமாற்றி விட்டனர்”

எனவே பாதிக்கப்பட்டவர்கள் இன்று அன்றாட வாழ்க்கையை வாழ முடியாத நிலையில், இவ்விடயம் குறித்து எமது  ஜனாதிபதி, பிரதமர் அடங்கலாக அரசாங்கத்தின் முக்கியஸ்தர்கள், உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்