மாடறுப்புத் தடையின் பின்னாலுள்ள பூகோள அரசியல் குறித்து, பஷீர் சேகுதாவூத் கருத்து
அரசியலமைப்பின் 13 ஆம் திருத்தத்தை இல்லாமல் செய்வதினால் இந்தியாவிற்கு ஏற்படுகின்ற கோபத்தை மாடறுப்புத் தடை எனும் விடயத்தினால் சமப்படுத்தலாம் என அரசாங்கம் எண்ணுகிறது என்றும், அதுதான் பூகோள அரசியல் எனவும் முன்னாள் அமைச்சரும் ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் தவிசாளருமான பஷீர் சேகுதாவூத் தெரிவித்தார்.
காத்தான்குடியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு பேசும்போது அவர் இதனைக் கூறினார்.
அங்கு அவர் மேலும் பேசுகையில்;
“மத ஆர்வத்தை அரசியலுக்காகப் பயன்படுத்துகிற போக்கு நீண்டகாலத்துக் முன்பே தொடங்கி விட்டது.
அரசியல் தலைவர்கள் சமூக அக்கறையற்றவர்களாக இருப்பதைப் பார்க்கிறோம்.
சஹ்ரானுடைய மூளையை சலவை செய்து, அவரை மூன்றாவது சக்தியொன்று கருவியாகப் பாவித்தது என்று கூறுவதை, சஹ்ரானை அப்பாவியாகக் காட்டும் முயற்சியாக சிங்கள புத்தி ஜீவிகள் பார்க்கின்றனர்.
மடத்தனைத்தை செய்கிற அரசியலில் இருந்து முஸ்லிம்கள் விடுதலையடைய வேண்டும்.
சிங்கள பௌத்த மக்களுக்குள் இருக்கின்ற மத ஆயுதத்தை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்தி புதிதாக வந்துள்ள அரசாங்கம், தாம் எதிர்கொள்கின்ற பூகோள அரசியல் பிரச்சினைகளைக் கையாளும் தந்திரமாகப் பயன்படுத்துகிறது” என்றார்