வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தை வலியுறுத்தி, கவனஈர்ப்பு நடவடிக்கை
🕔 October 23, 2015
![](https://puthithu.com/wp-content/uploads/2023/10/Kilakkin-Kedayam-750x150-01-.jpg)
![](https://puthithu.com/wp-content/uploads/2024/02/EFC-750X150-02.jpg)
![](https://puthithu.com/wp-content/uploads/2023/12/Atham-Lebbe-01-7500X150-.jpg)
![](https://puthithu.com/wp-content/uploads/2024/01/Abdullah-750X150-03-.jpg)
– அஹமட் –
வட மாகாணத்தில் வாழ்ந்த முஸ்லிம் மக்கள் விடுதலைப் புலிகளால் விரட்டியடிக்கப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவு பெறுவதை, நினைவுகூறும் வகையிலும், அந்த மக்களின் மீள்குடியேற்றத்தினை துரிதப்படுத்துமாறு அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்கும் வகையிலும், அட்டாளைச்சேனை பிரதேசத்தில் இன்று வெள்ளிக்கிழமை கவனஈர்ப்பு நடவடிக்கையொன்று இடம்பெற்றது.
அட்டாளைச்சேனை பெரிய பள்ளி வாசலில் ஜும்ஆ தொழுகை இடம்பெற்றதையடுத்து நடைபெற்ற இந்தக் கவனஈர்ப்பு நடவடிக்கையில், கிழக்கு மாகாணசபையின் மு.காங்கிரஸ் உறுப்பினர் ஏ.எல்.எம். நசீர், அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் என்.எல். யாசிர் ஐமன் உள்ளிட்ட பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.
இந்தக் கவனஈர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டவர்கள் வடக்கு முஸ்லிம்கள் தொடர்பிலான பல்வேறு வாசகங்களைக் கொண்ட பதாதைகளை ஏந்தியிருந்தனர்.
குறித்த பதாதைகளில் ‘நல்லாட்சி அரசே, வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தினை துரிதப்படுத்து’, ‘விரட்டியடிக்கப்பட்ட வடபுல முஸ்லிம்களின் வாழ்வில் விடிவு எப்போது’, 25 வருட, அவல வாழ்வுக்கு விடிவில்லையா’, ‘புலிகளின் இனவாதப் பசிக்கு இரையாகிய வடக்கு முஸ்லிம்களுக்கு மறுவாழ்வு எப்போது’ போன்ற வாசகங்கள் எழுதப்பட்டிருந்தன.
வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களுக்காக, இன்றைய தினத்தில் இவ்வாறானதொரு கவனஈர்ப்பு நடவடிக்கையினை நாடு பூராகவும் மேற்கொள்ளுமாறு, தேசப்பற்றுள்ள இளைஞர் அமைப்பு கோரிக்கை விடுத்திருந்தது.
1990 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம், வடக்கில் வாழ்ந்த முஸ்லிம் மக்கள், இரண்டு மணிநேர அவகாசத்துக்குள், அவர்களின் மண்ணிலிருந்து விடுதலைப் புலிகளால் விரட்டியடிக்கப்பட்டமை நினைவு கொள்ளத்தக்கது.
![](https://puthithu.com/wp-content/uploads/2024/03/Alahapuri-750X150-01.jpg)
![](https://puthithu.com/wp-content/uploads/2023/10/Fairoos-Express-750x150-01-.jpg)