ஆனந்த சங்கரியின் மகன், கனடா நாடாளுமன்ற தேர்தலில், இரண்டாவது முறையாகவும் வெற்றி

🕔 October 23, 2019

மிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ. ஆனந்த சங்கரியின் இளைய புதல்வர் கெரி ஆனந்தசங்கரி – கனடா நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார்.

கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தில் ஸ்காபரோ ரூஜ்பார்க் தொகுதியில் பெரும்பான்மை வாக்கு வித்தியாசத்தில் இவர் வெற்றிபெற்றுள்ளார்.

இவர் நாடாளுமன்ற உறுப்பினராக இரண்டாவது முறை வெற்றிபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஆளும் லிபரல் கட்சி சார்பில் போட்டியிட்ட கெரி ஆனந்த சங்கரி, இந்த தேர்தலில் 62.3 சதவீத வாக்குகள் பெற்றுள்ளார்.

அவரை எதிர்த்து கன்சவேடிவ் கட்சி சார்பில் போட்டியிட்ட லெஸ்லின் லூயிஸ் மற்றும் கனேடிய தமிழரான என்.டி.பி கட்சி வேட்பாளர் காந்தரட்ணம் சாந்தகுமார் ஆகியோர் போட்டியிட்டனர்.

ஸ்காபரோ ரூஜ்பார்க் தொகுதியில் 2015-ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட கெரி ஆனந்தசங்கரி, 34.8 வீத வாக்குகளை பெற்று வெற்றியை தன்வசப்படுத்தினார்.

இலங்கையில் யுத்த சூழ்நிலையை அடுத்து, தனது 13ஆவது வயதில் புலம்பெயர்ந்து இவர் கனடா சென்றார்.

கனடாவில் தமிழ் இளைஞர்கள் மத்தியில் ஏற்படும் வன்முறைகளை தீர்த்து வைக்கும் வகையில், கனடாவில் இளைஞர்கள் சேவை நிலையமொன்றை அவர் ஆரம்பித்துள்ளார்.

கனடாவில் வாழ்கின்ற தமிழ் இளைஞர்களிடம் காணப்படும் முரண்பாடுகளை தீர்ப்பதற்காக முன்னின்று செயற்படுபவராக கெரி ஆனந்தசங்கரி திகழ்கின்றார்.

கனடா தமிழ்ச் சங்கத்தின் செயற்பாடுகளிலும் அவர் பெரும் பங்களிப்பை வழங்கியுள்ளார்.

கனேடிய தமிழ்க் காங்கிரஸ் அமைப்பின் வளர்ச்சிக்காகவும் அவர் முன்னின்று செயற்பட்டுள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்