ஹபாயா அணியும் உரிமைக்காக போராடிய ஆசிரியைகளுக்கு, இடமாற்றம்: மேலதிக கல்விப் பணிப்பாளரின் கோமாளித்தனம்

🕔 April 26, 2018

திருகோணமலை ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரியில் கடமையாற்றும் முஸ்லிம் ஆசிரியைகளுக்கு  தற்காலிக இடமாற்றம் வழங்கப்படும் என்று கிழக்கு மாகாண மேலதிக கல்வி  பணிப்பாளர் ஏ. விஜயானந்தமூர்த்தி  தெரிவித்துள்ளார்.

குறித்த பாடசாலையில் முஸ்லிம் ஆசிரியைகள் ஹபாயா அணிகின்றமை தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைக்கு, மத்திய கல்வியமைச்சு சுமூகமான தீர்வொன்றினை வழங்கும் வரையில், குறித்த முஸ்லிம் ஆசிரியைகளை இவ்வாறு தற்காலிகமாக இடமாற்றவுள்ளதாக அவர் கூறினார்.

திருகோணமலை ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரி முஸ்லிம் ஆசிரியைகள் ஹபாயா அணிந்து வருகின்றமை தொடர்பில் இன்று வியாழக்கிழமை வலயக்கல்வி அலுவலகத்தில் இடம் பெற்ற விஷேட கலந்துறையாடலொன்று இடம்பெற்றது.

இந்தக் கலந்துரையாடலில் வலயக்கல்வி பணிப்பாளர் என். விஜேந்திரன் ,
பிரதி பொலிஸ்மா அதிபர் நிமால் பெரேரா, சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கபில கடுபிடிய, திருகோணமலை தலைமையக பொலிஸ் பொறுப்பதிகாரி துமிந்த ராஜபக்‌ஷ, அகில இலங்கை ஜம்யிய்யதுல் உலமா சபையின் திருகோணமலை நகரக் கிளைத் தலைவர் மௌலவி ஏ.ஆர். பரீட், திருகோணமலை பள்ளி வாசல்கள் சம்மேளனத்தின் தலைவர் எம்.எஸ். வலீத், என்.சீ. வீதி பள்ளிவாசல் தலைவர் எம்.வை. இல்யாஸ்,  நகர சபை உறுப்பினர் ஆசிரியர் மௌசூன், பிரதேச சபை உறுப்பினர் துவான் வஹார்தீன், திடீர் மரண விசாரணை அதிகாரி ரூமி  மற்றும் சிறி சன்முகா இந்து மகளிர் கல்லூரி அதிபர், ஆசிரியர்கள், பழைய மாணவர்கள் மற்றும் பாடசாலை அபிவிருத்தி சங்கத்தினர் கலந்து கொண்டனர்.

இதன்போது ஒவ்வொரு மதத்தவர்களுடைய கலாசார விழுமியங்களை மதித்து புரிந்துணர்வுடன்  ஒற்றுமையாக வாழ  வேண்டுமெனவும், சமூகங்களுக்கிடையிலான ஒற்றுமை தொடர்பில் கரிசனையுடன் வாழ வேண்டுமெனவும் வலியுறுத்தப்பட்டது.

இதேவேளை,  முஸ்லிம் மக்களுக்கு தாங்கள் எதிரானவர்கள் அல்ல என பாடசாலை சார்பாக கலந்து கொண்டவர்கள் தெரிவித்ததோடு, பாடசாலையின் சமய கலாசாரம் பேணப்பட வேண்டுமென தாங்கள் எதிர்பார்ப்பதாகவும் கூறினார்.

மேலும், பாடசாலைக்கு பொருத்தமான பாடசாலையினால்  தீர்மானிக்கப்பட்ட ஆடைகளை ஆசிரியர்கள் அணிய வேண்டும் என்பதை தாம் வலியுறுத்துவதாகவும் அக்கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்