தலைப்புச் செய்திகள்

தாமரை மொட்டு வேட்பாளர் மீது தாக்குல்; இருவர் கைது, ஒருவர் தலை மறைவு

– க. கிஷாந்தன் –

தாமரை மொட்டு சின்னத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின்  சார்பில் அக்கரப்பத்தனை பிரதேச சபைக்கான தேர்தலில் போட்டியிடும் செல்வராஜ் ராஜ்குமார் என்பவர் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஆதரவாளர்கள் மூவரால் நேற்று புதன்கிழமை மாலை டயகம கொலனி பகுதியில் வைத்து தாக்கப்பட்டதாக டயகம பொலிஸ் நிலையத்தில் முறைபாடு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு தாக்குதலுக்குள்ளானவர் டயகம பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சைக்கென நேற்று மாலை அனுமதிக்கப்பட்டார்.

இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக வைத்திய சிகிச்சையை மேற்கொண்டு வருபவரிடம் டயகம பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதன் போது, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஆதரவாளர்களால், தான் தாக்கப்பட்டதாக பொதுஜன முன்னணி வேட்பாளர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

அதேவேளை தாக்கப்பட்டவர் அவரின் குழுவுடன் சென்று வாக்கு சேகரிக்கப்பதற்கு முன்பு, வர்த்தக நிலையம் ஒன்றில் நாணயங்களை மாற்றுவதற்காக சென்றபோதே தாக்குதலுக்குள்ளாகியதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ள அதேவேளை, மேலும் ஒருவரை தேடி வருவதாகவும், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை விசாரித்து வருவதாகவும் டயகம பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

ஆனால் இந்த சம்பவம் தனிப்பட்ட குழுக்கிடையில் இடம்பெற்றதாகவும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஆதரவாளர்கள் தாக்கினார்கள் என்பது பொய்யான விடயம்  என டயகம பொலிஸ் தரப்பு தெரிவிக்கின்றது.

எவ்வாறாயினும், தன்னை தாக்கியவர்கள் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஆதரவாளர்கள் தான் என, தாமரை ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின்  சார்பில் போட்டியிடும் செல்வராஜ் ராஜ்குமார் உறுதியாக தெரிவிக்கின்றார்.