அஷ்ரஃப்பின் மரணத்தினுடைய முழுமையான பெறுபேற்றை, ஐ.தே.கட்சி அனுபவிக்கிறது:  பசீர் சேகுதாவூத் கவலை

🕔 December 22, 2017

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கு அர்ப்பணிப்புள்ள செயலாளர் இல்லாமல் செய்யப்பட்டமையும், தலைவரின் அரசியல் தீர்மானங்களுக்கு மாற்று அபிப்பிராயங்களைத் தெரிவித்து கட்சியை சமநிலைக்கு கொண்டுவரும் ஆலோசகர்கள் அப்புறப்படுத்தப்பட்டமையுமே, எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தல் வேட்புமனுக் காலத்தில் கட்சி அனர்த்தத்துக்கு உள்ளானமைக்கான பிரதான காரணமாகும் என்று, மு.காங்கிரசின் முன்னாள் தவிசாளரும், ஐக்கிய சுதந்திர கூட்டணியின் தற்போதைய தவிசாளருமான பசீர் சேகுதாவூத் தெரிவித்துள்ளார்.

மேலும், வழக்கொன்றின் மூலம், மு.காங்கிரசின் சின்னம் களவாடப்படாத போதும், அந்தக் கட்சி சுயேட்சையாகப் போட்டியிட வேண்டிய நிலை, இத்தேர்தலில் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மு.காங்கிரசின் தற்போதைய நிலை குறித்து,  பசீர் சேகுதாவூத் மேலும் கூறியுள்ளதாவது;

முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் அம்பாறை மாவட்டம் உள்ளிட்ட கிழக்கு மாகாணத்தில், வரலாற்றில் என்றுமில்லாத வகையில் உள்ளூராட்சித் தேர்தலுக்காக ஐக்கிய தேசியக் கட்சியில் மு.கா. வேட்பாளர்கள் நியமிக்கப்படுள்ளனர். நாடு முழுவதிலும் மு.காங்கிரஸ் சார்பில் சமர்ப்பிக்கப்பட்ட பல வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. இறுதித் தினத்துக்குள் அந்தக் கட்சி சார்பான வேட்புமனுக்கள் கையளிக்கப்படாமல் போயுள்ளன. வழக்கொன்றின் மூலம் மு.கா.வின் சின்னம் களவாடப்படாத போதும், அந்தக் கட்சி சுயேட்சையாகப் போட்டியிடும் நிலையும் இத்தேர்தலில் ஏற்பட்டுள்ளது.

மு.காங்கிரசின் ‘செயலாளர் நாயகம்’ என்ற அதிகாரமுள்ள பதவியானது, தலைவருக்கு அடிபணிந்து, கேள்வி ஏதும் கேட்காமல் – தலைவரின் உள்நோக்கங்களுக்கு தலையசைக்கும்படியான அதிகாரமற்ற செயலாளராக, கட்சியின் யாப்புத் திருத்தத்தின் ஊடாக 2015ஆம் ஆண்டு மாற்றப்பட்டது. இதன் விளைவினைத்தான் இப்போது அந்தக் கட்சி அனுபவித்துக் கொண்டிருக்கிறது.

முன்பெல்லாம் முஸ்லிம் காங்கிரஸ் தனது நலனுக்காக ஐக்கிய தேசியக் கட்சியை பயன்படுத்தியிருந்தது. தற்போது ஐக்கிய தேசியக் கட்சி – தனது நலனுக்காக முஸ்லிம் காங்கிரசின் தனித்துவத்தைப் பலி எடுத்திருக்கிறது.

பெருந்தலைவர் மர்ஹூம் அஷ்ரஃப்பினுடைய மரணத்தின் முழுமையான பெறுபேற்றை, பதினேழு வருடங்களின் பின்னர் – இந்த உள்ளூராட்சித் தேர்தலின் மூலம் ஐக்கிய தேசியக் கட்சி பெற்றுக்கொண்டுள்ளது.

முஸ்லிம் காங்கிரஸ் உருவாகிய பின்னர் பெற்றுக்கொண்ட அத்தனை வாக்குகளும், முன்னதாக ஐக்கிய தேசியக் கட்சி பெற்று வந்த வாக்குகளாகும். அதனால், ஐக்ககிய தேசியக் கட்சியானது, தனது பழைய முஸ்லிம் வாக்கு வங்கியை, மீண்டும் பெற்றுக்கொள்ள பகீரத முயற்சிகளை கடந்த காலங்களில் மேற்கொண்டு வந்தது. ஆனால் அஷ்ரஃப் உயிரோடிருக்கும் வரை அது சாத்தியமாகவில்லை.

பின்னர், றவூப் ஹக்கீமைக் கொண்டு முஸ்லிம் காங்கிரசை மொத்தமாகக் கொள்வனவு செய்வதற்கு, ஐக்கிய தேசியக் கட்சி முயற்சித்தது. ஆனால், கிழக்கு முஸ்லிம்களின் மீதும் தனித்துவ அரசியல் தாகத்திலும் அசைக்க முடியாத பற்றுக் கொண்டிருந்த கட்சியின் கிழக்குத் தலைவர்களால் அம்முயற்சிகள் முறியடிக்கப்பட்டன.

தற்போது கிழக்கின் வணங்காமுடித் தலைவர்கள் எவரும் கட்சிக்குள் இல்லை. அதனால் ஐ.தே.கட்சியின் 28 வருட நோக்கம் – ஹக்கீம் ஊடாக நிறைவேறியுள்ளது.

கட்சியின் வேட்புமனுக்கள் நிராகரிகரிக்கப்பட்டமையும், கையளிக்கத் தாமதம் ஏற்பட்டமையும் ஐ.தே. கட்சியின் வேண்டுதலுக்கமைய வேண்டுமென்றே ஆடப்பட்ட நாடகமா? என்ற சந்தேகம் ஏற்படுவதையும் தவிர்க்க முடியவில்லை.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்