காட்டு யானையைக் கொன்றால், ஆயுள் தண்டனை; அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிப்பு
காட்டு யானைகளைக் கொல்பவர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்க, அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
விலங்குகள் மற்றும் தாவர பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தைத் திருத்துவதன் மூலம், இதனை அமுல்படுத்துவதற்கு அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
இது குறித்து அமைச்சரவைப் பத்திரமொன்றினை- நிலையான அபிவிருத்தி மற்றும் வனவிலங்குகள் அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா சமர்ப்பித்துள்ளார்.
வனவிலங்கு உத்தியோகத்தர்கள், பொலிஸார் மற்றும் பாதுகாப்பு படையினர் இணைந்து, காட்டு யானைகளை பாதுகாப்பதற்கான திட்டமொன்றினையும் அமைச்சர் தனது அமைச்சரவைப் பத்திரத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இதற்காக, வனவள பாதுகாப்பு திணைக்களம் மற்றும் மகாவலி அதிகார சபையின் உதவிகளைப் பெறுவதற்கும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
அண்மைக்காலமாக, காட்டு யானைகள் தொடர்ச்சியாகக் கொல்லப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
யானைகளின் தந்தங்களினுள் இருக்கும் கஜ முத்துக்களைப் பெறுவதற்காகவே, இவ்வாறு காட்டு யானைகள் கொல்லப்படுவதாகக் கூறப்படுகிறது.