ஜனவரி 29 இல் உள்ளுராட்சி தேர்தல்; இம்மாதம் 27ஆம் திகதிக்கு பின்னர் அறிவிக்கப்படும்
உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தல்களை ஜனவரி 29ஆம் திகதியன்று நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழுவின்தீர்மானித்துள்ளதாக நம்பகமான தகவல்கள் கூறுகின்றன.
ஒவ்வொரு உள்ளுராட்சி சபைக்குமான தேர்தல் அறிவித்தல்களை அந்தந்த சபைகள் அமைந்துள்ள மாவட்டங்களுக்குப் பொறுப்பான தெரிவத்தாட்சி அலுவலர்களே விடுக்க வேண்டும். அவர்களுக்கான வழிகாட்டல்களை தேர்தல்கள் ஆணையகம் வழங்கும்.
அந்த வகையில், இம்மாதம் 27ஆம் திகதிக்கும் 30ஆம் திகதிக்கும் இடைப்பட்ட காலத்தில், ஒவ்வொரு தெரிவத்தாட்சி அலுவலரும் தத்தமது பகுதியிலுள்ள சபைகளுக்கான தேர்தல் தினத்தினை அறிவிப்பர்.
அந்த அறிவித்தல் விடுக்கப்பட்டு சரியாக இரண்டு வாரங்களில், வேட்புமனுத் தாக்கல் செய்யும் தினம் பற்றிய அறிவித்தல் வெளியிடப்படும்.
நியமனப்பத்திரங்களை தாக்கல் செய்வதற்கு மூன்றரை வேலை நாட்கள் அவகாசம் வழங்கப்படுதல் வேண்டும்.
எனவே, தேர்தல் பற்றிய அறிவிப்பு இம்மாதம் 27 தொடக்கம் 30ஆம் திகதி வரையில் வழங்கப்பட்டால், நியமனப்பத்திரம் ஏற்பதற்கான நாட்கள், டிசம்பர் 11ஆம் திகதிக்கும் 17ஆம் திகதிக்கும் இடைப்பட்ட காலத்தில் முடிவடையும்.
அதன்பின்னர் ஜனவரி 25க்கும் 31க்கும் இடையில் தேர்தலை நடத்தலாம்.
இந்த நிலையில்தான் ஜனவரி 29ஆம் திகதி தேர்தலை நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு முடிவு செய்துள்ளதாக தெரியவருகிறது.