சமஷ்டியை முழு நாட்டுக்கும் வழங்குவது குறித்து பரிந்துரைக்கலாம்: வட மாகாண முதலமைச்சர்
வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு சமஷ்டி ஆட்சியை வழங்குவதில் சிக்கல்கள் உள்ளதென சிங்கள சமூகத்தினர் கருதுவார்களாயின், முழு நாட்டுக்கும் சமஷ்டி முறையிலான ஆட்சியினை வழங்குவது குறித்து பரிந்துரைக்கலாமென வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
சமஷ்டி குறித்து தென்னிலங்கையில் பாரிய எதிர்ப்பு உள்ளமை தொடர்பாக, ஆங்கில ஊடகமொன்று எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே, அவர் இதனைக் கூறினார்.
சமஷ்டி ஆட்சி முறைமையானது, நாட்டை பிளவு படுத்தும் என்று பெரும்பான்மை சமூகத்தவர்கள் கருதினாலும், உண்மையில் இந்த முறைமையினால் நாட்டில் வேறுபாடுகள் களையப்பட்டு நல்லிணக்கமும் சமாதானமும் உருவாகும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சிறுபான்மையினருக்கு உரிமைகளை வழங்குவது தமது பொறுப்பாகும் என்று ஜெனீவாவில் தெரிவித்த அரசாங்கம், நாட்டுக்கு வந்தததும் தமது அரசியல் நலன் சார்ந்துதான் செயற்படுகிறது எனவும்அவர் தெரிவித்தார்.