வடக்கு – கிழக்கு இணைப்பு சாத்தியமில்லை என்றால்; ரெலோ செயலாளர் ஸ்ரீகாந்தா, மாற்று யோசனை முன்வைப்பு

🕔 October 9, 2017

டக்கு – கிழக்கு மாகாணங்களை இணைப்பது சாத்தியமில்லை எனும் நிலைவரம் ஏற்படுமாக இருந்தால், தமிழ் பேசும் மக்களுக்குரிய ஒரு மாகாணமாக கிழக்கை மாற்றுவது குறித்து பரிசீலிக்க முடியும் என்று, ரெலோ இயகத்தின் செயலாளர் நாயகம் என். ஸ்ரீகாந்தா தெரிவித்துள்ளார்.

மேலும், கிழக்கு மக்களை பலிக்கடாக்களாக்கி கிடைக்கும் தீர்வினை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், கிழக்கு மக்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் வகையிலேயே அரசியல் தீர்வு அமைய வேண்டும் என்றும், அவர் கூறியுள்ளார்.

புதிய அரசியலமைப்புக்கான வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை தொடர்பில் ரொலோ உறுப்பினர்களுக்கு விளக்கமளிக்கும் செயலமர்வு நேற்று ஞாயிற்றுக்கிழமை வவுனியாவில் இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு பேசும் போதே, அவர் இந்த விடயங்களைத் தெரிவித்தார்.

ஒருமித்த நாடாக இலங்கை இருக்கப் போகின்றதென்றால், அதற்குள்ளேயே அதிகாரப் பகிர்வு திருப்திகரமாக அமையும் என்றும், எஞ்சிய ஒரே பிரச்சினையாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் இணைவு பற்றிய விடயம் இருக்குமாயின், அது தொடர்பான விட்டுக் கொடுப்புக் குறித்து சிந்திக்க வேண்டிய நிலை ஏற்படும் என்றும், அவர் மேலும் குறிப்பிட்டார்.

எனினும், திருகோணமலையிலிருந்து பொத்துவில் வரையிலுள்ள தமிழ் மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தக் கூடிய, ஒரு நிருவாக முறைமையை மாத்திரமே ஏற்றுக் கொள்வோம் எனவும் ஸ்ரீகாந்தா தெரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்