‘தொழில் முயற்சியாண்மைக்கான அதிகார சபை’ நிறுவ, அமைச்சரவை அனுமதி; அமைச்சர் ரிஷாட் அறிவிப்பு

🕔 September 13, 2017

சிறிய, மற்றும் நடுத்தர முயற்சியாண்மைக்கான தேசிய கொள்கை ஒன்றையும் சிறிய மற்றும் நடுத்தர முயற்சியாண்மைக்கான தேசிய அதிகார சபையொன்றையும் அமைப்பதற்கான முயற்சியில் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின் கீழான தேசிய கைத்தொழில் அபிருத்தி அதிகார சபை (நெடா) நடவடிக்கை எடுத்துவருவதாக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

மாக்கந்துறையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இன்கியுபேட்டர் மற்றும் தொழில்நுட்ப பரிமாற்றல் இயந்திர மத்திய நிலையம் அங்குரர்ப்பண விழாவில் விசேட விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றிய போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

இந் நிகழ்வில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பிரதம விருந்தினராக கலந்துகொண்டார். அமைச்சர் ரிஷாட் பதியுதீன் இங்கு மேலும் கூறுகையில்;

“இலங்கையின் சிறிய மற்றும் நடுத்தர முயற்சியாண்மைத் துறையில்  ஒரு  முன்னோடியான நிகழ்வாக இது வரலாற்றில் பொறிக்கப்பட வேண்டும்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் இணைந்து பொருளாதார மற்றும் கைத்தொழில் மறுசீரமைப்பில் பாரிய திட்டங்களை மேற்கொண்டுள்ளனர். இந்த அபிவிருத்தி இலக்கில் சிறிய மற்றும் நடுத்தர முயற்சியாண்மையானது மூலோபாயத்துறையாக கருதப்படுகின்றது. பொருளாதார வளர்ச்சி, பிராந்திய அபிவிருத்தி, இளைஞர் வேலைவாய்ப்பு, வறுமை ஒழிப்பு ஆகியவற்றில் இது பாரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இலங்கையில் சிறிய மற்றும் நடுத்தர முயற்சியாண்மை மற்றும் நுண், சிறிய மற்றும் நடுத்தர முயற்சியாண்மை ஆகிய துறைகளில் ஒரு மில்லியனுக்கு அதிகமான தொழில் முயற்சியாளர்கள் பதிவு செய்துள்ளனர். கிராமப் பிரதேசங்களில் சராசரியாக மூன்று பேருக்கு ஒருவர் வீதம் தொழில் வாய்ப்பை இந்தத் துறையில் பெற்றுள்ளனர்.

இலங்கையின் பொருளாதாரத்தில் சுமார் 70 சதவீதத்துக்கு அதிகமான தொழில் முயற்சியாளர்களின்  தாக்கத்தை இந்தத் துறை செலுத்திவருவதோடு, 45 சதவீதமான தொழிலாளர்களும் இதில் பங்கேற்றியிருக்கின்றனர். அத்துடன்  மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 52 சதவீதமான பங்களிப்பையும் நல்குகின்றது.

பூகோளமயமாக்கலின் வளர்ச்சி மற்றம் அபிவிருத்தியின் நவீன போக்குக்கேற்ப, இந்தத் துறையும் அதிகரித்துவருகின்றது.

இலங்கையில் முன்னொருபோதும் இல்லாதவாறு தேசிய சிறிய மற்றும் நடுத்தர முயற்சியாண்மைக் கொள்கையின் திட்டவரைபுகள் எனது அமைச்சினால் உருவாக்கப்பட்டு, அமைச்சரவையின் அங்கீகாரத்தை பெற்றிருப்பது மகிழ்ச்சிதருகின்றது. இதன் விளைவாக இந்தத் துறையை முன்னெடுத்துச் செல்ல எமக்கு பாரிய உத்வேகம் கிடைத்துள்ளது. அது மாத்திரமன்றி, அமைக்கப்படவுள்ள அதிகார சபை தொடர்பான செயற்பாடுகள் முன்னேற்றகரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் மூலம் தொழில் துறையில் பாரிய வளர்ச்சியை எட்டலாம் என கருதுகிறோம். நெடா நிறுவனம் அபிவிருத்தியை மட்டும் இலக்காக கொண்டு செயற்படவில்லை. புதிய சிறிய நடுத்தர முயற்சியாண்மைகளை உருவாக்கும் செயற்பாடுகளிலும் ஈடுபட்டுவருவதை நான் இங்கு பெருமிதத்துடன் குறிப்பிட விரும்புகின்றேன்.

மாக்கந்துறையில் இன்று நிர்மாணிக்கப்பட்டுள்ள இன்கியுபேட்டர், மற்றும் தொழில்நுட்ப பரிமாற்ற நிலையம் இந்தத்துறையில் முதன்முதலாக அறிமுகப்படுத்தப்படுகின்றது. இலங்கையில் இந்த முயற்சியாண்மைத் துறையானது பல்வேறு துறைகளை இணைப்பதற்கு உதவுகின்றது. மலேசியன் தொழில்நுட்ப அபிவிருத்தி கூட்டுத்தாபனம் இதனை அமைப்பதற்கு உதவியுள்ளதுடன், அவர்களுடைய நிபுணர்களையும் எமக்கு வழங்கியுள்ளது. அந்த நிறுவனத்திற்கு எங்கள் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம். எனது அமைச்சும்  60 மில்லியன் ரூபாவினை இந்த நிர்மாணப்பணிகளுக்கு செலவிட்டுள்ளது என்பதை குறிப்பிட்டேயாகவேண்டும்.

சிறிய மற்றும் நடுத்தர முயற்சியாண்மை துறையை அபிவிருத்தி செய்வதற்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பங்களிப்பை நல்கி வருவதை நான் பாராட்டுகிறேன். இந்தத் துறைக்கான நிதியியல் திட்டத்திற்கு பிரதமர் தமது விசேட நிதியிலிருந்து 0பில்லியன் ரூபாவினை ஒதுக்கியுள்ளமை வர்த்தகத் துறையில் மற்றுமொரு பரிமாணத்தை நாம் அடைவதற்கு  உதவியுள்ளது என்பதை நன்றியுடன் தெரிவித்துக்கொள்கின்றேன்” என்றார்.

(அமைச்சரின் ஊடகப் பிரிவு)

Comments

புதிது பேஸ்புக் பக்கம்