மத்தள விமான நிலையத்தையும் விற்பதற்கான பேச்சுக்களை முடித்து விட்டனர்: நாமல் கவலை

🕔 August 8, 2017
ல்லாட்சி செல்கின்ற போக்கை பார்க்கின்ற போது, இலங்கை நாட்டின் முழுச் செல்வங்களையும் விற்றுவிடுவார்களோ என்ற அச்சம் எழுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ தெரிவித்தார்.

மொனறாகலயில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர் இதனைக் கூறினார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்;

“அண்மைக் காலமாக நாட்டின் வளங்களை வெளிநாடுகளுக்கு விற்கும் கதைகள்தான் அடிப்பட்டுக்கொண்டிருக்கின்றன. அந்த வகையில், தற்போது மத்தள விமான நிலையத்தை விற்பனை செய்யும் முயற்சிகள் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றன. அதற்கான பேச்சுவார்த்தைகள் திருப்திகரமாக அமைந்துள்ளதாக தகவல் பிரதி அமைச்சர் அசோக அபேசிங்க குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை நாடு செல்வம் கொழிக்கும் வளமுடைய ஒரு நாடாகும். இலங்கை சுதந்திரம் பெற முன்பு  அதன் செல்வத்தை இலங்கை நாட்டை அடிமைப்படுத்தி வெளிநாட்டுக்காரர்கள் கொள்ளையடித்து சென்றார்கள். இன்று சுதந்திர இலங்கையில் இந்த அரசாங்கத்தை அடிமைப்படுத்தி வெளிநாட்டுக்காரர்கள் கொள்ளையடித்து செல்கிறார்கள்.

இவ்வரசாங்கம்  இலங்கை வளங்களை விற்பதை அவதானிக்கின்ற போது, இலங்கை நாட்டின் முழு வளங்களையும் மிக விரைவில் வெளிநாடுகளுக்கு தாரை வார்த்து விடுவார்களோ என்ற அச்சம் எழுகிறது. இந்நிலை தொடர்ந்தால் இலங்கை நாடு வெளிநாட்டுக்காரர்களுக்கு அடிமைப்பட்டுக் கிடக்க வேண்டி ஏற்படும்.

இந்த நல்லாட்சிக்காரர்கள் தங்களை ஆட்சிக்கு கொண்டு வர உதவிய தனது எஜமானார்களுக்கு, நாட்டை தாரை வார்த்துக்கொடுக்க வேண்டிய தேவை உள்ளது. அதனை, நாட்டின் மீது உண்மையான பற்றுக்கொண்ட நாம் வேடிக்கை பார்க்க முடியாது.

இவ்வரசாங்கம், எங்களின் சேவைகளை அவமானப்படுத்த, மத்தளை விமான நிலையத்தை நெல் களஞ்சியசாலையாக மாற்றிய போது, மிகப் பெரும் மக்கள் எதிர்ப்பை சம்பாதித்து இறுதியில் அதனை கைவிட்டிருந்தது. மாத்தள விமான நிலையம் வெளிநாட்டுக்கு விற்கப்ப்படுமாக இருந்தால், இவ்வரசாங்கத்துககு எதிரான மக்கள் புரட்சி மத்தளயில் இருந்து ஆரம்பிக்கும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை” என்றார்.

(ஒன்றிணைந்த எதிரணியின் ஊடகப் பிரிவு)

Comments

புதிது பேஸ்புக் பக்கம்