உணவுப் பரிசோதனை ஆய்வு கூடம், இலங்கையில் முதன் முறையாக நிறுவப்படவுள்ளது: அமைச்சர் றிசாட் தகவல்

🕔 August 4, 2017

சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாண்மைத் துறைகளில் முதன்முறையாக ‘உணவுப் பரிசோதனை ஆய்வு கூடம்’ ஒன்றை, இலங்கையில் கைத்தொழில் அபிவிருத்தி சபை நிறுவவுள்ளதாக கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க ஞாபகார்த்த  மண்டபத்தில் உணவு, பொதியிடல் மற்றும் விவசாயம் தொடர்பான கண்காட்சியை அமைச்சர் இன்று வெள்ளிக்கிழமை அங்குரார்ப்பணம் செய்துவைத்தார்.

எதிர்வரும் 06ஆம் திகதிவரை இடம்பெறவுள்ள இக்கண்காட்சியை, இலங்கை உணவு பதனீட்டாளர்கள் சங்கம் மற்றும் இலங்கைப் பொருட்காட்சி மற்றும் மாநாட்டு சேவைகள் நிறுவனம் ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்துள்ளன.

உள்நாட்டு, வெளிநாட்டு உற்பத்தியாளர்களுக்கென 350க்கு மேற்பட்ட கண்காட்சிக் கூடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இத்தொழிற்துறையில் பாரிய சர்வதேச தொழில்பாட்டாளர்களாக திகழ்கின்ற இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளுக்கு இரண்டு கண்காட்சிக் கூடங்கள் வேறுவேறாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இந்த கண்காட்சிக் கூடங்களுக்கு கைத்தொழில் அமைச்சு அனுசரணை வழங்கியுள்ளது.

அமைச்சர் இங்கு உரையாற்றும் போது மேலும் கூறுகையில்;

“இலங்கையில்  முதன்முதலாக தேசிய மற்றும் கிராமிய உணவுத் தயாரிப்பாளர்களின் நலனைக்கருதி பதிவு செய்யப்பட்ட உணவு பரிசோதனை ஆய்வு கூடமானது 140 மில்லின் ரூபா செலவில் அமைக்கப்படவுள்ளது. எல்லா மாவட்டங்களிலிருந்தும் கொண்டு வரப்படும் உணவுத் தயாரிப்புக்களை இந்த ஆய்வு கூடம் பரிசோதனை செய்ய தயாராகவுள்ளது.

அத்துடன் கைத்தொழில் அபிவிருத்திச் சபை அதிகாரிகள் பரிசோதனைக்கான தயாரிப்புப் பொருட்களை மாவட்டங்கள் தோறும் சேகரிப்பர். இந்த ஆய்வுகூடம், இலங்கை தரக்கட்டளைகள் நிறுவனம் மற்றும் சர்வதேச தரக்கட்டளைகள் நிறுவனம் ஆகியவற்றைப் போன்று சர்வதேச மற்றும் உள்நாட்டு தரங்களை பேணும் வகையில் பயன்படுத்தப்படும்.

மேலும் இலங்கையின் உணவுத் தொழிலக அபிவிருத்தி நடவடிக்கைகளை பல்வேறு வழிகளில் அடையாளப்படுத்த எனது அமைச்சு திட்டமிட்டுள்ளது. சிறிய அளவிலான உணவுத் தயாரிப்பாளர்கள் பல்வேறு தேவைப்பாடுவுள்ளவர்களாக இருக்கின்றனர். அவர்களின் சிறிய அளவிலான உணவுத் தயாரிப்புச் செயற்பாடுகளை ஊக்குவிப்பதற்காக நவீன தொழில்நுட்ப முறைகளை அவர்களுக்கு வழங்கி, அந்த தொழில் முயற்சிகளுக்கு உதவவிருக்கின்றோம். இந்தத் தொழில்நுட்பத் திட்டத்திற்கு ரூபா 10 மில்லியன் ரூபாய் செலவிடப்படவுள்ளது.

விஷேடமாக சிறிய உணவுத் தயாரிப்பு பொருட்களை பொதியிடுவதற்கு உதவிகள் தேவைப்படுகின்றன. இந்தத்துறையை மேம்படுத்தவும், ஊக்குவிக்கவும், சந்தைப்படுத்தவும் 6.7 மில்லியன் ரூபா செலவிடவுள்ளோம். அத்துடன் சிறந்த தயாரிப்புப் பொருட்களுக்கான சான்றிதழ்களை வழங்கி, உணவுப் பாதுகாப்பை மேம்படுத்தவும் உற்பத்தித் தரத்தை ஊக்குவிக்கவும் இன்னுமொரு திட்டத்தை நடைமுறைப்படுத்தவுள்ளோம்.

இதனைத் தவிர மேலும் ஒரு முக்கிய திட்டமாக கைத்தொழில் தயாரிப்பு, சந்தைப்போட்டி, மற்றும் நிலைபேறான ஊக்குவிப்புத் திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்காக 14 மில்லியன் ரூபாவினை ஒதுக்கியுள்ளோம்.

இந்தக் கண்காட்சியானது 2001ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு, இந்தவருடம் 16வது முறையாக இடம்பெறுவது மகிழ்ச்சி தருகின்றது. கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சு, உணவு மற்றும் பொதியிடல் தொடர்பான தயாரிப்பு முயற்சிகளை ஊக்குவிப்பதில் அதிக சிரத்தை காட்டிவருகின்றது” என்றார்.

(அமைச்சரின் ஊடகப் பிரிவு) 

Comments

புதிது பேஸ்புக் பக்கம்