உங்களிடம் இருப்பது போல், ஹக்கீமுக்கு இருக்கவில்லை; விஜேதாச ராஜபக்சவுக்கு பசீர் சேகுதாவூத் விளக்கம்

🕔 June 22, 2017

ந்த தனி முஸ்லிம் தலைவர்களையும் காரணம் காட்டி, சமூகத்தின் மீது நசுக்கும் பாய்ச்சலை நிகழ்த்த முற்படும் எவருக்கும் எதிராக கருத்துப் போர் தொடுப்பதிலும், ராஜ தந்திர முன்னெடுப்கபுளைச் செய்வதிலும் தாம் பின்னிற்கப் போவதில்லை என்று, மு.காங்கிரசின் முன்னாள் தவிசாளரும், முன்னாள் அமைச்சருமான பசீர் சேகுதாவூத் தெரிவித்துள்ளார்.

சிறுபான்மை மக்கள் பிரதிநிதிகளைக் கைது செய்யவேண்டும் எனக் குரல் கொடுக்கும் சிங்கள அரசியல் தலைவர்களை, முதலில் கைது செய்வதற்கு, தகுந்த நிறையக் காரணங்கள் உள்ளன என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நீதியமைச்சர் விஜேதாஸ ராஜபக்ச, ஞானசார தேரருக்கு அடைக்கம் கொடுத்து வைத்துள்ளார் எனக் கூறப்பட்ட குற்றச்சாட்டினை மழுங்கச் செய்வதற்காக, 2010ஆம் ஆண்டு, அளுத்கம சம்பவம் நடந்தபோது, ஞானசார தேரரை றவூப் ஹக்கீமா மறைத்து வைத்திருந்தார் என, அமைச்சர் விஜேதாஸ கேள்வியெழுப்பியிருந்தமை தொடர்பாக, தனது கருத்தினை பதிவு செய்கையிலேயே, மேற்கண்ட விடயங்களை பசீர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது;

ஞானசார தேரருக்கு விஜேதாஸ ராஜபக்ச அடைக்கலம் கொடுத்து வைத்துள்ளார் என்று குற்றஞ்சாட்டப்பட்டது. இதன்போது, இக்குற்றச்சாட்டை எதிர்கொள்வதற்கும் தனது செயலை மூடி மறைப்பதற்கும் அமைச்சர் றவூப் ஹக்கீமை, விஜேதாச துணைக்கு அழைத்துள்ளார். அதாவது, ஹக்கீம் 2010 ஆம் வருடத்தில் இருந்து 2014 வரை நீதியமைச்சராக இருந்தார். அக்காலத்துக்குள்தான் அழுத்கம சம்பவம் நடந்தது. அப்போது ஞானசாரரை ஹக்கீமா மறைத்து வைத்திருந்தார் என்ற கருத்துப்பட, விஜேதாச கேள்வி எழுப்பியிருக்கிறார்.

அமைச்சர் விஜேதாச அவர்களே;

1) அழுத்கம சம்பவத்தின் பின் தேரர் தலை மறைவாகி இருக்கவில்லை என்பதை தெரியாதிருக்கிறீர்கள்.
2) அழுத்கம அழிவுக்கு ஞானசார தேரர்தான்காரணம் என்பதை பகிரங்கமாக ஏற்கிறீர்கள்.
3) முஸ்லிம் தீவிரவாதிகளை முஸ்லிம் அமைச்சர்கள் மறைத்து வைத்துள்ளார்கள் என்று, பொருத்தமாகப் பொய் சொல்வதற்கு எவரையோ தயார்படுத்துகிறீர்கள்.

போன்றவற்றினை நடுவு நிலையாளர்களால் புரிந்து கொள்ள முடிகிறது.

விஜேதாச அவர்களே,

* இந்த அரசாங்கத்தில் நீங்கள் வகிக்கும் பதவி நிலை போல கேள்விக்கு உட்படுத்தப்படாத நீதி மற்றும் கேள்விக்குட்படுத்த முடியாத புத்தசாசனம் ஆகிய விடயதானங்களை, அன்றைய அரசாங்கத்தில் ஹக்கீமின் அமைச்சு கொண்டிருக்கவில்லை.

* நீங்கள் இன்று கொண்டிருக்கும் அதிகாரத்தைப் போல – தற்றுணிவோடு, சட்டத்துக்குப் புறம்பாக செயலாற்றியபடி, நீதியமைச்சராக இயங்கும் அதிகாரத்தை அன்று றவூப் ஹக்கீம் கொண்டிருந்ததில்லை.

* நீங்கள் இந்த அமைச்சை வைத்துக் கொண்டு இயங்கும் தன்மையைப் பொறுத்து, பௌத்த சிங்கள மக்களுக்குள் செல்வாக்கைப் பெருக்கிக் கொள்வதன் மூலம், உங்களுடைய தனிப்பட்ட அரசியல் நிகழ்ச்சி நிரலில் உள்ளடங்கியுள்ள ‘எதிர்காலத்தில் தேசத்தின் தலைமையைக் கைப்பற்றும்’ எந்தவொரு மறைமுகத் திட்டமும், ஒரு சிறுபான்மை இனத்தைச் சேர்ந்தவர் என்ற வகையில், ஹக்கீமுக்கு இருந்திருக்க வாய்ப்பில்லை என்பதனால், ஞானசார தேரரை மறைத்து வைக்கும் தேவை உங்களைப் போல் அவருக்கில்லை.

மேற்படி எனது அவதானங்களை, தங்களுக்குச் சமர்ப்பிக்க விரும்புகிறேன்.

2010 ஆம் ஆண்டு ஹக்கீம் நீதியமைச்சராகவும், நான் உள்நாட்டு வர்த்தகப் பிரதியமைச்சராகவும் பிரமாணம் எடுத்துக் கொண்டு வெளியேறும் தருணத்தில், அமைச்சர் ஹக்கீமிடம் பின்வருமாறு கூறினேன்.

” தலைவரே, உங்களுக்கு ‘நீதி’யில் ‘பாதி’ எனக்கு ‘பாதி’யில் ‘நீதி’.

உடனே, “வெளியில் யாருடமும் இப்படிக் கூறிவிடாதீர்கள்” என்று அவர் என்னைக் கேட்டுக் கொண்டார்.

நான் இதனை ‘புரவலர்’ ஹாஷிம் உமரிடம் மட்டுமே கூறினேன். இன்றும், உமர் என்னைக் காணும் போதெல்லாம் “பாதி” என்றே அழைக்கிறார்.

அப்போது நீதியமைச்சில் இருந்த முக்கிய அரைவாசி திணைக்களங்களை, அன்றைய ஜனாதிபதி தன்வசம் எடுத்துக் கொண்டுதான் ஹக்கீமுக்கு வழங்கியிருந்தார். அதே காலப் பகுதியில் நான் அரை அமைச்சராக நியமிக்கப்பட்டிருந்தேன். இதனை வைத்தே மேற்கூறிய எனது கூற்றை ‘அன்றைய’ எனது தலைவரிடம் கூறினேன்.

எமது கட்சிக்குள் உட்கட்சி ஜனநாயகம் கிஞ்சித்தும் கிடையாது, கட்சியின் புதிய யாப்புத் திருத்தங்களால் தனி மனிதன் வீங்கி வெடிக்கப் பார்க்கிறார். சமூகத்தின் நலனுக்கும் – நீதிக்கும் – பாதுகாப்புக்குமான குரல் ‘கம்மி’ விட்டது. கட்சியின் தீர்மானிக்கும் சக்தி, சுயநலமிகளின் கைகளுக்கு மாறிவிட்து. எனவேதான், தூய்மையாக்கல் செயல்பாடுகளில் நாம் இறங்கியிருக்கிறோம்.

ஆனால், எந்த தனி முஸ்லிம் தலைவர்களையும் காரணம் காட்டி சமூகத்தின் மீது நசுக்கும் பாய்ச்சலை நிகழ்த்த முற்படும் எவருக்கும் எதிராக கருத்துப் போர் தொடுப்பதிலும், ராஜ தந்திர முன்னெடுப்பகளைச் செய்வதிலும் நாம் பின்னிற்கப் போவதில்லை.

அமைச்சர்களான றவூப் ஹக்கீமையோ, றிஷாட்டையோ அல்லது முதலமைச்சர் விக்னேஸ்வரனையோ, சிவாஜிலிங்கத்தையோ கைது செய்யவேண்டும் எனக் குரல் கொடுக்கும் சிங்கள அரசியல் தலைவர்களை, முதலில் கைது செய்யத் தகுந்த நிறையக் காரணங்கள் உண்டு என்பதை உரத்துச் சொல்லும் தருணமிது.

மாற்று மருந்தை தயாரிக்கும் காலமிது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்