முஸ்லிம்களின் கடைகளுக்கு தீ வைத்தவர், முன்னாள் ராணுவ சிப்பாய்; குற்றத்தையும் ஒப்புக் கொண்டார்
மஹரகம மற்றும் விஜேராம பிரதேசங்களிலுள்ள முஸ்லிம்களின் கடைகளுக்கு, தீ வைத்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நபர், ராணுவத்திலிருந்து ஓய்வு பெற்ற ஒருவர் என பொலிஸாரின் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
குறித்த நபர், மஹரகம பாடசாலை மாவத்தையை சேர்ந்தவராவார்.
மஹரகம மற்றும் விஜேராம பிரதேசத்தில் அமைந்துள்ள முஸ்லிம் உரிமையாளர்களின் கடைகளுக்கு, தீ வைத்தமை தொடர்பில் அரசாங்க புலனாய்வு பிரிவு அதிகாரிகளினால் நேற்று வியாழக்கிழமை இவர் கைது செய்யப்பட்டார்.
தீ வைக்கப்பட்ட கடையொன்றில் பொருத்தப்பட்டுள்ள சீ.சீ.ரி.வி. வீடியோ காட்சிகளை அடிப்படையாக வைத்து நடத்தப்பட்ட விசாரணைகளுக்கிணங்க, சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டார்.
குறித்த கடையொன்றுக்கு தீ வைத்தபோது, சந்தேக நபரின் காலில் தீ காயமும் ஏற்பட்டுள்ளது.
மேற்படி நபர், இரவு நேரங்களில் சைக்கிளில் வந்து, மூடியிருக்கும் வர்த்தக நிலையங்களுக்கு தீ வைக்கும் காட்சியும் சீ.சீ.ரி.வி. வீடியோவில்பதிவாகியுள்ளது.
கைது செய்யப்படட நபர் வழங்கிய நீண்ட வாக்குமூலத்தில், தனது குற்றத்தை ஒப்பு கொண்டுள்ளார்.
கடந்த மே மாதம் 22ஆம் திகதி மஹரகம ஹைலெவல் வீதியில் அமைந்துள்ள கடை ஒன்றுக்கும், மே மாதம் 24ஆம் திகதி விஜேராமவில் அமைந்துள்ள கடை ஒன்றுக்கும், ஜுன் 06ஆம் திகதி விஜேராமவில் அமைந்துள்ள வர்த்தக நிலையம் மற்றும் நேற்று முன் தினம் மஹரகமையில் அமைந்துள்ள மற்றும் ஒரு வர்த்த நிலையத்திற்கும் தீ வைக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவங்களினால் சம்பந்தப்பட்ட வர்த்தக நிலையங்களுக்கு பாரிய சேதம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
எவ்வாறாயினும், யாரின் தூண்டுதலுக்கிணங்க மேற்படி கடைகளுக்கு, சந்தேக நபர், தீ வைத்தார் என்பதை அறியும் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
வீடியோ