மயில் கருத்தரிப்பது எப்படி; நீதிபதியின் விளக்கத்தால் எகிறும் விசனம்
மயில் கர்ப்பம் தரிக்கும் விதம் தொடர்பாக இந்தியாவின் ராஜஸ்தான் மாநில உயர் நீதிமன்ற நீதிபதியொருவர் தெரிவித்த கருத்து, பாரியளவில் விசனங்களுக்கும் விமர்சனங்களுக்கும் உள்ளாகி வருகிறது.
மயில் பிரமசாரி என்றும், அதனால்தான் அது தேசிய பறவையாக இருக்கிறது என்றும் கூறியுள்ள நீதிபதி, பெண் மயிலுடன் ஆண் மயில் உடலுறவு கொள்வதில்லை என்றும் கூறியிருக்கின்றார். மேலும், ஆண் மயிலின் கண்ணீரைக் குடிப்பதன் மூலமே, பெண் மயில் கருத் தரிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தான் உயர் நீதிமன்ற நீதிபதி மகேஷ் சந்திர சர்மா என்பவரே இவ்வாறு கூறியுள்ளார்.
இதேவேளை, பசுவை இந்தியாவின் தேசிய விலங்காக அறிவிக்க வேண்டும் என்றும் அந்த நீதிபதி தெரிவித்துள்ளார்.
மயில் குறித்து நீதிபதி தெரிவித்துள்ள இந்தக் கருத்தை இந்திய ஊடகங்கள் வெளியிட்டுள்ள நிலையில், குறித்த நீதிபதியை சமூக வலைத்தளங்களில் பொதுமக்கள் கடுமையாக திட்டியும் விமர்சித்தும் எழுதி வருகின்றனர்.
இன்னொரு புறம், குறித்த நீதிபதியின் கருத்தை வைத்து பகிடிகளும், நையாண்டிகளும் சமூக வலைத்தளங்களில் கிளம்பத் தொடங்கியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.