முஸ்லிம்களை நிம்மதியிழக்கச் செய்து,அதில் இன்பம் காண விழைகின்றனர்; அமைச்சர் றிசாட் விசனம்

🕔 May 16, 2017

வெல்லம்பிட்டிய – கொஹிலவத்தை இப்ராஹிமிய்யா ஜும்மா பள்ளிவாசல் நேற்று நள்ளிரவு தாக்குதலுக்கு உள்ளான செய்தியறிந்து,  அமைச்சர் ரிஷாட் பதியுதீன் இன்று செவ்வாய்கிழமை நண்பகல் அங்கு விஐயம் செய்து நிலைமைகளை பார்வையிட்டார்.

நடந்த விடயங்களை கேட்டறிந்துகொண்ட அவர், வெல்லம்பிட்டய பொலிஸ் பொறுப்பதிகாரியைச் சந்தித்து நிலைமைகளை விசாரித்ததுடன் பாதுகாப்பு தொடர்பில் தீவீர கவனம் செலுத்துமாறும் வேண்டினார்.

“புனித றமழான் நெருங்கும் போது, இனவாதிகள் இவ்வாறான குழப்பத்தை உருவாக்குவதையும், சமூகங்களுக்கிடையே பிரச்சினையை ஏற்படுத்துவதை நோக்கமாக கொண்டு செயற்பட்டதையும் கடந்தகாலங்களில் கண்டுள்ளோம். அந்த பின்னணியிலேயே வெல்லம்பிட்டி பள்ளிவாசல் தாக்குதலையும் கருதவேண்டும்.
இனவாதிகள் முஸ்லிம்களை நிம்மதியிழக்கச் செய்து அதில் இன்பம் காண விழைகின்றனர்” என்று தெரிவித்த அமைச்சர்; “அரசாங்கம் இந்த விடயங்களில் பாராமுகமாக இருந்தால் நிலைமைகள் விபரீதமாகி, நாட்டின் அமைதிக்கு பங்கம் ஏற்படும்” என்றார்.

இச்சம்பவத்துடன் தொடர்புபட்ட நாசகாரிகள் கைதுசெய்யப்பட்டு, சட்டத்தின் முன் நிறுத்தப்படுவதற்கு பொலிஸார் தீவிரமாக செயற்பட வேண்டுமெனவும் அமைச்சர் கூறினார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்