சவாலை வென்று காட்டியுள்ளேன்; எனது சவாலை எதிர்கொள்வீர்களா: ஆட்சியாளர்களிடம் மஹிந்த கேள்வி

🕔 May 1, 2017

னக்கு முன்னால் வைக்கப்பட்ட சவாலை ஏற்று, காலி முகத்திடலை தான் நிரப்பிக் காட்டியுள்ளதாக  தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, முடியுமானால் உள்ளூராட்சி மன்றம் மற்றும்  மாகாண சபை தேர்தல்களை இந்த அரசாங்கம் நடாத்திக் காட்டட்டுமென சவால் விடுத்தார்.

கொழும்பு காலிமுகத்திடலில் இடம்பெற்ற, ஒன்றிணைந்த எதிரணியினரின்  மேதினக்கூட்டத்தில் உரையாற்றிய போதே, அவர் இந்த சவாலை முன்வைத்தார். 

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்;

“காலி முகத்திடலில் எமது மே தின கூட்டத்தை நடத்தப்போவதாக கூறிய போது, சிலர் ஏளனமாக சவால் விட்டனர். முடியுமானால் காலி முகத்திடலில் அரைவாசியையாவது நிரப்பிக் காட்டட்டும் என்றனர். நாம் எமது அரசியல் வாழ்வில் பல சவால்களைச் சந்தித்துள்ளோம். எனவே, இந்த சவாலையும் தைரியமாக  ஏற்றுக்கொண்டோம்.

இன்று காலி முகத்திடலை அல்ல, அதையும் தாண்டி மக்கள் வெள்ளம் படையெடுத்துள்ளது. ஒருபுறம் கொள்ளுபிட்டி சந்திவரையும் மறுபுறம் கொம்பனி வீதி வரையும் மக்கள் நிரம்பியுள்ளனர்.

எமது சில ஆதரவாளர்கள் உள்ளே வரமுடியாமல்,கொள்ளுப்பிட்டி சந்தியில் இருந்து என்னை தொடர்புகொண்டு, “சேர் எங்களுக்கு அவ்விடத்துக்கு வரமுடியவில்லை, நாம் திரும்பி செல்லவா?” என அனுமதி கேட்கின்றனர்.

இந்த அரசாங்கத்துக்கு முடியுமானால் உள்ளூராட்சி மன்ற மற்றும்  மாகாண சபை தேர்தல்களை நடத்துமாறு சவால் விடுகிறேன். நாம் அவர்களின் சவாலை ஏற்று, இன்று மக்களை ஒன்று திரட்டி காட்டியுள்ளோம். அவர்கள் எங்களது சவாலை ஏற்பார்களா?” என்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்