கோட்டா எப்போதும் கைது செய்யப்படலாம்: ஜனாதிபதியின் தலையசைவுக்காக, அதிகாரிகள் காத்திருப்பு
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவை, மிக் விமான கொள்வனவில் மேற்கொள்ளப்பட்ட மோசடி தொடர்பில் கைது செய்வதற்கு, உயர் மட்ட அரசியல் பிரமுகர்களின் சம்மதத்துக்காக நிதி மோசடி விசாரணை பிரிவு அதிகாரிகள் காத்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
மிக் விமானக் கொள்வனவு தொடர்பில் நிதி மோசடி விசாரணை பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் தற்போது இறுதிக் கட்டத்தில் இருப்பதாக உயர்மட்ட பொலிஸ் வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.
இந்த விசாரணையுடன் தொடர்புடைய முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவை கைது செய்வதற்கு, நிதி மோசடி விசாரணை பிரிவு காத்திருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
உயர் மட்ட அரசியல் பிரமுகர்கள் சம்மதித்தால், கோட்டாவை கைது செய்வது உறுதி எனவும் கூறப்படுகிறது.
உயர் மட்ட புள்ளிகளை கைது செய்வதற்கு முன்னர், தனக்கு அறிவிக்க வேண்டும் என கடந்த வருடம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருந்தார்.
மிக் விமான கொள்வனவில் மேற்கொள்ளப்பட்ட முறைகேடு தொடர்பில் கோட்டாவிடம் பல முறை, நிதி மோசடி விசாரணை பிரிவினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
மிக் விமான கொள்வனவு தொடர்பாக நிதி மோசடி விசாரணை பிரிவுக்கு பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மிக் விமான கொள்வனவு முறைகேடு தொடர்பில் ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கைத் தூதுவர் உதயங்க வீரதுங்கவை இன்டர்போல் மூலம் கைது செய்வதற்கான உத்தரவினையும் அண்மையில் நீதிமன்றம் பிறப்பித்தது.
உதயங்க வீரதுங்க என்பவர் – முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மருமகன் ஆவார்.