பள்ளிவாசலில் அரசியல் பேச முடியாது; ஊடகவியலாளரின் கேள்விக்கு, முன்னாள் ஜனாதிபதி பதில்

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரத்துங்க, கொழும்பு தெவட்டகஹா பள்ளிவாசலில் ஏற்பாடு செய்ப்பட்டிருந்த இப்தார் நிகழ்வில் – நேற்று வெள்ளிக்கிழமை சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.
அமைச்சா்கள் ஏ.எச்.எம். பௌசி, எம்.கே.ஏ.டி.எஸ். குணவா்த்தன மற்றும் மத்திய மாகாணசபை உறுப்பினர் ஆசாத் சாலி, முன்னாள் மேல் மாகாண ஆளுநர் அலவி மௌலானா ஆகியோரும் இந் நிகழ்வில் பங்குபற்றினர்.
இப்தார் நிகழ்வுக்கு வருகை தந்திருந்த சந்திரிக்கா குமாரதுங்கவிடம்; ‘முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு ஜக்கிய மக்கள் சுதந்திர முன்னணியினூடாக தேர்தலில் போட்டியிடுவதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளமை’ தொடர்பில் எமது ஊடகவியலாளர் கருத்துக் கேட்டார்.
அதேவேளை, ‘கம்பஹா மாவட்டத்தில் நீங்கள் போட்டியிடுவீர்களா’ எனவும் வினவினார்.
இதற்குப் பதிலளித்த முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா;
“இது பள்ளிவாசல், இங்கு அரசியல் பேச முடியாது” என்று கூறினார்.
மேலும், “எனது காலத்தில் முஸ்லிம் மக்கள் தமது கடமைகளைச் சரியாகச் செய்வதற்காக, பள்ளிவாசல்களை அமைப்பதற்கு – எவ்வித தடையும் இருக்கவில்லை. ஆனால், அந்த யுகம் இனி இல்லை” எனவும் தெரிவித்தார்.