ஹனலியிடம் கண்ணீர் சிந்திய ஹக்கீமின் சகோதரப் பேர்வழி: பொறியில் சிக்கும்போதுதான் உண்மைகள் உறைக்கின்றன

🕔 December 10, 2016

hasanali-01234– றிசாத் ஏ காதர் –

“நீங்கள் இல்லாத மு.காங்கிரசின் மேடைகள் அலங்காரமிழந்து விட்டன. நீங்கள் முஸ்லிம் காங்கிரசில் பழைய மாதிரி இணைந்து செயற்பட வேண்டும். பிரச்சினைகளுக்கு ஒரு தீர்வு காணுங்கள்” என்று, மு.காங்கிரசின் செயலாளர் ஹசனலியை அண்மையில் சந்தித்த  மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீமுடைய சகோதரர் ஒருவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இஸ்லாமிய தமிழ் இலக்கிய பொன்விழா எனும் பெயரில், முஸ்லிம் காங்கிரஸ் அண்மையில் நடத்திய நிகழ்வில், மு.கா.வின் ஸ்தாபகத் தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப்பின் ‘நான் எனும் நீ’ என்கிற கவிதைத் தொகுப்பின் மீள் பிரசுரம் வெளியிடப்பட்டது.

மேற்படி கவிதை நூலின் சில பிரதிகளுடன் மு.கா. செயலாளர் ஹசனலியை, அவரின் வீட்டில் ரஊப் ஹக்கீமுடைய சகோதரப் பேர்வழி சந்தித்த போதுதான் மேற்கண்டவாறு கூறியிருந்தார். இவ்வாறு பேசும்போது மு.கா. தலைவரின் சகோதரரின் கண்களில் கண்ணீர் கசிந்ததாகவும் தகவல் அறிந்தவர்கள் கூறுகின்றன.

“ஹக்கீம் – ஹசனலி பிரச்சினை இவ்வளவு காலமும் நடந்தபோது, எதுவும் பேசாமல் முசுப்பாத்தி பார்த்துக் கொண்டிருந்த மு.கா.வின் சகோதரப் பேர்வழி, இப்போது மட்டும் ஹசனலியின் வெற்றிடம் குறித்துப் பேசுவதற்கும், அது குறித்து கண்ணீர் கசிவதற்கும் காரணங்கள் இல்லாமலில்லை” என்று, மு.கா.வின் மூத்த உயர்பீட உறுப்பினர் ஒருவர் இதுகுறித்துக் கூறினார்.

ஹசனலியின் செயலாளர் பதவிக்குரிய அதிகாரங்களை சூழ்ச்சிகரமாக ரஊப் ஹக்கீம் பறித்து எடுத்தமை தொடர்பில், தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் தற்போது கடுமையான முடிவு ஒன்றினை எடுத்துள்ளமை காரணமாகவே, ஹசனலியுடன் ஹக்கீமுடைய சகோதரப் பேர்வழி இவ்வாறான சமரசத்துக்கு வந்துள்ளதாகவும், கட்சியின் முக்கியஸ்தர்கள் பலர் சுட்டிக்காட்டுகின்றனர்.

மேலும், உயர்பீடத்துக்கான செயலாளர் என தெரிவு செய்யப்பட்ட நபரை, கட்சியின் செயலாளர் பதவிக்குரியவர் என தேர்தல் ஆணையாளருக்கு ரஊப் ஹக்கீம் அறிவித்தமையைானது, தற்போது ஹக்கீமுக்கு மிகவும் ஆபத்தான பிரச்சினையாக மாறியுள்ளது. இதற்கு இம்மாதம் 15ஆம் திகதிக்குள் முடிவு காணப்படாது விட்டால், எதிர்வரும் தேர்தல்களில் முஸ்லிம் காங்கிரஸ் தனது சொந்தச் சின்னத்தில் போட்டியிட முடியாத நிலை உருவாகி விடும்.

இப்படி நடந்து விட்டால் ரஊப் ஹக்கீம் மிக மோசமானதொரு பொறிக்குள் மாட்டிவிடுவார். ஹக்கீமுடைய கையை விட்டு மு.காங்கிரஸ் பறிபோகும் நிலை ஏற்படும். இப்படி ஏதாவது நடந்து விட்டால், மு.கா.வையும். அதன் தலைவராக ஹக்கீமையும் வைத்துக் கொண்டு பிழைப்பும் – உழைப்பும் நடத்துகின்ற ஹக்கீமின் சகோதரப் பேர்வழிகளின் கஜானாக்களிலும் மண் விழும் நிலை ஏற்பட்டு விடும்.

இதையெல்லாம் பாதுகாத்துக் கொள்வதற்காகவே, ஹக்கீமுடைய சகோதரப் பேர்வழி, ஹசனலியிடம் சென்று கண்ணீர் சிந்தும் நாடகத்தை அரங்கேற்றியதாக மு.கா. உயர்பீட முக்கியஸ்தர்கள் கூறுகின்றனர்.

இதேவேளை, ஹக்கீம்தான்-  தனது சகோதரப் பேர்வழியை இவ்வாறு ஹசனலியிடம் அனுப்பி வைத்திருக்கக் கூடும் என்றும் கட்சியின் முக்கியஸ்தர்கள் பேசிக்கொள்கின்றனர்.

பொறிகளுக்குள் சிக்கிக் கொள்கின்றபோதுதான், சிலருக்கு உண்மைகள் உறைக்கத் தொடங்குகின்றன.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்