மங்கள சமரவீர ;இலங்கை வரலாற்றில் மிகவும் பலவீனமான வெளிவிவகார அமைச்சர்
வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, தனக்கு எதிராக தொடர்ந்தும் போலி பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றார் என்று, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ குற்றம் சாட்டியுள்ளார்.
கீழ்தரமான அரசியல் நோக்கங்களை ஈடுசெய்துக் கொள்ளும் வகையிலேயே, மங்கள இவ்வாறு நடந்து கொள்வதாகவும் கோட்டா தெரிவித்துள்ளார்.
கோட்டாவின் புதல்வருக்காக 27 மில்லியன் ரூபா துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளதாகவும், இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் அமைச்சர் மங்கள குறிப்பிட்டிருந்த நிலையில், இதற்கு கடும் கண்டனத்தை கோட்டா வெளியிட்டபோதே, மேற்கண்ட விடயத்தினைக் கூறியுள்ளார்.
இது தொடர்பில் கோட்டா மேலும் தெரிவிக்கையில்; “நான் 18 பில்லியன் அமெரிக்க டொலர்களை துபாயிலுள்ள வங்கிக் கணக்கொன்றில் வைத்திருப்பதாக மங்கள பொய் பிரசாரம் செய்து வந்தார். தற்போது எனது பிள்ளைக்கு எதிராக குற்றம் சுமத்திவருகிறார்.
கீழ்தரமான அரசியல் நோக்கங்களை ஈடுசெய்ய, இது போன்ற பிரசாரங்களை மேற்கொள்வது இவ்வாறான அமைச்சர்களுக்கு நல்லதல்ல. இலங்கை வரலாற்றில் மிகவும் பலவீனமான வெளிவிவகார அமைச்சராக மங்கள காணப்படுகிறார்.
இவர் என்ன செய்தாலும் இறுதியில் என்னிடம் தான் ஓடிவர நேரிடும். இதற்கு முன்னர் மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தில் இணைவதற்காக அவர் ஓடி வந்தார். அதேபோல் எதிர்காலத்திலும் ஓடி வர நேடிடும்” என்றார்.