அமெரிக்காவிற்காவுக்கான முன்னாள் இலங்கைத் தூதுவர் ஜாலிய விக்ரமசூரிய கைது நேற்று வியாழக்கிழமை செய்யப்பட்டார்.
கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக நாட்டை விட்டு தப்பிச் செல்ல முயற்சித்த போது, இவரை நிதி மோசடி விசாரணைப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.
ரகசியமான முறையில் நாட்டை விட்டு தப்பிச் செல்லவே ஜாலிய திட்டமிட்டிருந்தார் எனவும், நிதி மோசடி விசாரணைப் பிரிவினர் காத்திருந்து கைது செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கைது செய்யப்பட்ட ஜாலியவிடம் மிக நீண்ட நேரம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
அமெரிக்காவுக்கான இலங்கைத் தூதுவராக ஜாலிய கடமையாற்றிய காலத்தில் மேற்கொண்டதாகக் கூறப்படும் பாரிய நிதி மோசடிகள் தொடர்பில், நிதி மோசடி விசாரணைப் பிரிவினர் விசாரணை நடத்தியிருந்தனர்.
இந்த நிலையில், இந்த விசாரணைகளுக்காக நேற்றும் நிதி மோசடி விசாரணைப் பிரிவில் முன்னிலையாகுமாறு ஜாலியவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில், எவ்வித அறிவிப்பும் விடுக்காது நாட்டை விட்டுத் தப்பிச் செல்ல முயற்சித்திருந்தார் என தெரிவிக்கப்படுகிறது.
கைது செய்யப்பட்ட ஜாலிய விக்கிரமசூரிய இன்று வெள்ளிக்கிழமை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.