முக்கியஸ்தர்களை படமெடுத்த இளைஞனின் உளவளம் தொடர்பில், அறிக்கை சமர்ப்பிக்குமாறு உத்தரவு
இசையமைப்பாளர் டப்ளியு.டி. அமரதேவாவின் இறுதிச் சடங்கில் கலந்து கொண்ட முக்கியஸ்தர்களை படம் பிடித்தார் எனும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள இளைஞனின் உளவளம் தொடர்பில் அறிக்கையொன்றினைச் சமர்ப்பிக்குமாறு, கொழும்பு பிரதம நீதவான் ஜிஹான் பிலப்பிட்டிய இன்று செவ்வாய்கிழமை உத்தரவிட்டுள்ளார்.
குறித்த இளைஞன் மனநோயினால் பாதிக்கப்பட்டவர் என்று, அவர் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் இன்று நீதிமன்றில் தெரிவித்திருந்தனர். மேலும், அந்த இளைஞன் பயன்படுத்திய கமரா – அவரின் உறவினர் ஒருவரிடமிருந்து பெறப்பட்டதாகவும் சட்டத்தரணிகள் இதன்போது கூறினர்.
அமரதேவாவின் இறுதிச் சடங்கில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட முக்கிய அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்டிருந்தனர். இதன்போது, மேற்படி இளைஞர் – அங்கு நுழைந்து, புகைப்படம் எடுத்ததாகக் குற்றம்சாட்டப்படுகிறது.
இதன்போது கைது செய்யப்பட்ட மேற்படி இளைஞரை நீதிமன்றில் ஆஜர்படுத்தியபோது, அவரை இம்மாதம் 17 ஆம் திகதி வரை, விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.