புத்தர் சிலை விவகாரம்; எதிர்க்கட்சிக்காரனைப் போல், ஹக்கீம் பார்த்து விட்டுப் போனமை கேவலமானது: முபாறக் மௌலவி காட்டம்

🕔 November 2, 2016

mubarak-moulavi-0-9897– எஸ். அஷ்ரப்கான் –

மிழ் பேசும் மக்கள் மட்டுமே வாழும் இற‌க்காம‌த்தில் புத்த‌ர் சிலை அரச ஆதரவு அதிகாரிகளுடன் வைக்கப்பட்டமை, இந்த அரசின் இனவாதத்தை காட்டுவதுடன், முஸ்லிம் காங்கிரசின் கையாலாகாதனத்தையும் காட்டுகிறது என உலமா கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்;

“கடந்த அரசாங்கம் போன்றே எதுவித வித்தியாசமும் இன்றி, இந்த அரசாங்கமும் செயற்படுகிறது. மஹிந்தவை தோற்கடித்து விட்டால் எல்லாம் சரியாகிவிடும் என நினைத்த முஸ்லிம் சமூகம் இன்று ஏமாந்து போய் நிற்கிறது. இத்தகைய சிங்கள இனவாதம் ஓங்கக்காரணம் மஹிந்த அல்ல, மாறாக வெளிநாட்டு சக்திகளும் முஸ்லிம் அரசியல்வாதிகளின் பிழையான வழிகாட்டல்களும், மக்கள் உண்மையை புரியாமல் உணர்ச்சிகளின் பின்னால் அள்ளுப்படுவதும்தான் என உலமா கட்சியினராகிய நாம் அன்றே கூறினோம்.

அம்பாறை மாவ‌ட்ட‌த்தில் முஸ்லிம்கள் சார்பாக முஸ்லிம் காங்கிர‌சுக்கு ம‌ட்டுமே நாடாளும‌ன்ற‌ உறுப்பின‌ர்க‌ள் உள்ள‌னர். வேறு எந்த‌க்க‌ட்சிக்கும் உறுப்பினர்கள் இல்லை. இந்த நிலையில் முஸ்லிம் காங்கிரசின் தலைவர் அமைச்சரவை அமைச்சராகவும், ஆட்சி செய்யும் ஐக்கிய தேசிய கட்சியின் பிரதான உறுப்பினராகவும் உள்ளார். அப்படியிருந்தும் இவ்வாறான நிகழ்வுகளை தடுக்க அல்லது அவற்றை நீக்க அவரால் முடியவில்லை என்றால், அது – மு. கா.வினதும் அதன் தலைமை மற்றும் உறுப்பினர்களின் கையாலாகாதனமாகும். இத்தகைய ஒருவர் அக்கட்சிக்குத் தலைமை வகிப்பது கேவலமானதாகும்.

இம்முறை நடைபெற்ற ஜனாதிபதி தேர்தல் மற்றும் நாடாளுமன்ற தேர்தல்களில் அம்பாறை மாவட்ட முஸ்லிம்கள் பெருமளவு ஒற்றுமைப்பட்டு இந்த அரசுக்கும் மு.கா.வுக்கும் வாக்களித்தார்கள். முஸ்லிம்க‌ளின் ஒற்றுமையில் அம்பாறையில் நாம் குறை காண‌வே முடியாது. இந்த நிலையிலும் நன்றி கெட்டதனமாக அரசாங்கம் இவ்வாறான இனவாத நிகழ்வுகளுக்கு துணை போகிறது. சிலை வைக்கப்பட்டதும் ர‌வூஃப் ஹ‌க்கீம் அங்கு போய், ஒரு எதிர் க‌ட்சிக்க‌ர‌னைப்போல் ம‌க்க‌ளை ச‌ந்தித்துவிட்டுப் போன‌மை அதை விட கேவ‌ல‌மான‌து.

நாடாளுமன்றத்துக்கு பிரதிநிதிகளை மக்கள் அனுப்புவது, அங்கு போய் அவர்கள் தேங்காய் துருகுவதற்கல்ல. பொது மக்களால் நினைத்த மாத்திரத்தில் பிரதமரையோ, ஜனாதிபதியையோ சந்திக்க முடியாது. ஆனால் ஓர் அமைச்சரவை அமைச்சரால் அதுவும் பல நாடாளுமன்ற பிரதிநிதிகள் கொண்ட கட்சித்தலைவரால் உடனடியாக அவர்களை தொடர்பு கொண்டு இப்பிரச்சினைகளை தீர்க்க முடியும்.

இன்றைய அர‌சாங்க‌ம் இவர்களுடைய‌ அர‌சாங்க‌மே தவிர, ம‌ஹிந்த‌வுடைய‌து அல்ல‌. மஹிந்தவுக்கு 80 வீதமான முஸ்லிம்கள் கடந்த எந்த தேர்தலிலும் வாக்களித்ததே இல்லை என்பதால், அவரது காலத்தில் இப்படியான நிகழ்வுகள் நடந்தமையை ஓரளவு பொறுத்துக்கொள்ளலாம்.

ஆனாலும், அவர் நாட்டில் பயங்கரவாதத்தை ஒழித்தது போன்ற பல நன்மைகளை முஸ்லிம்களுக்கு பெற்றுத்தந்துள்ளார்.

ஆனால், இன்று நிலைமை என்ன? முஸ்லிம்களின் 98 வீதமான வாக்ககளை பெற்ற அரசாங்கம் முஸ்லிம்களுக்கு எந்த நன்மையும் செய்யாமல் தொடர்ந்தும் அநியாயங்களையே செய்கிறது. அம்பாறை மாவட்ட முஸ்லிம்களின் முழு அதிகாரத்தையும் தனது கையில் வைத்திருக்கும் ஹக்கீமுக்கு இத‌னை எப்படி தீர்ப்ப‌து என்று தெரியாதா, அல்ல‌து க‌ல்முனை வ‌ரை சிலை வைக்க‌ட்டும் என்று இனவாதத்துக்கு துணை போகிறாரா?

ஜ‌னாதிப‌தியுட‌ன் பிர‌த‌ம‌ருட‌ன் ஒரு தொலைபேசி அழைப்பில் முடிக்கும் விட‌ய‌த்தை கோடாரி கொண்டா முடிப்ப‌து? இந்த விடயம், இனி வழக்கு என்றும் அதற்கு அப்பாலும் நீண்டு செல்லுமே தவிர, சிலை அகற்றப்பட மாட்டாது.

கடைசியில் அடுத்த தேர்தலில் முண்டாசு கட்டிக்கொண்டு இவற்றை தீர்க்க மீண்டும் ஆணை தாருங்கள் என ஹக்கீமும், அவரது ஏமாற்று சுயநல சகாக்களும் கூறுவார்கள். முஸ்லிம்களும் அனைத்தையும் மறந்து உசார் மடையர்களாகி, தக்பீர் கோசம் போடுவார்கள் என்பதுதான் முஸ்லிம் அரசியலின் மிக மோசமான போக்காகும்” என்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்