ஒலுவில் துறைமுகத்தை மீனவத் துறைமுகமாக மாற்றுவதற்கு, அமைச்சரவை அனுமதி: அமைச்சர் றிசாத் தெரிவிப்பு
– சுஐப் எம். காசிம் –
ஒலுவில் துறைமுகத்தை மீனவத் துறைமுகமாக மாற்றுவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக, அமைச்சர் றிசாத் பதியுதீன் தெரிவித்தார்.
இதன் மூலம் ஒலுவில் பிரதேச மக்களினதும், அதனை அண்டியுள்ள கிராமங்களான பாலமுனை மற்றும் நிந்தவூர் பகுதி மக்களினதும் நீண்டகால குறைகளுக்கும், பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைக்குமென்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
பாலமுனை அஸ்ரி அசாம் எழுதிய ‘இது ஒரு தருணம்’ கவிதை நூல் வெளியீட்டு விழாவில், பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றியபோதே, அமைச்சர் இதனைக் கூறினார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்;
“ஒலுவில் கடலரிப்பினால் அந்தப் பிரதேச மக்கள் படுகின்ற கஷ்டங்களை ஆராய்ந்து, அதனை நிவர்த்தி செய்யும் நோக்கில் அமைக்கப்பட்ட அமைச்சரவையின் உபகுழுவில் நானும் இருக்கின்றேன். ஒலுவில் கடலரிப்பினால் மக்கள் அனுபவிக்கும் கஷ்டங்களை, நான் நேரில் கண்டும், உங்களின் வாயிலாகவும் அறிந்திருக்கின்றேன்.
ஒலுவிலில் மீனவத் துறைமுகம் அமைக்கப்படுவதன் மூலம், கடலரிப்பினால் ஒலுவில் பிரதேச மக்களுக்கு ஏற்பட்டுள்ள கஷ்டங்கள் தீர்க்கப்படுவதோடு, கடலரிப்பின் தாக்கத்தை அனுபவிக்கும்ஏனைய பகுதிகளான பாலமுனை மற்றும் நிந்தவூர் மக்களுக்கும் இனி விமோசனம் கிடைக்குமென நான் நம்புகின்றேன்.
இதன் மூலம் இந்தப் பிரதேச மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கு நல்ல தருணம் ஏற்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் கூறுகின்றேன்.
பாலமுனை கிராமமானது அதிகளவான எழுத்தாளர்களையும், கவிஞர்களையும், இலக்கியவாதிகளையும் தோற்றுவித்த கிராமம். அதனைஅடியொட்டி இளம்கவிஞர் அஸ்ரி அசாம் அவர்கள் தனது எழுத்துப்பணியை மிகவும் சிறப்பாகக் செய்திருக்கின்றார்.
இந்தக் கிராமத்தின் வாழ்க்கை முறை மற்றும் தனது வாழ்வில் ஏற்பட்ட ஏக்கங்களையும் கவிதையாக வடித்திருகின்றார். அவருக்கு எனது பாராட்டுக்கள்” என்றார்.