மஹிந்த ராஜபக்ஷவின் மைத்துனர், திருக்குமரன் நடேசன் கைது
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மைத்துனர் முறையானபிரபல கோடீஸ்வர வர்த்தகர் திருக்குமரன் நடேசன், நிதிக்குற்ற விசாரணை பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இவர் மஹிந்த ராஜபக்ஷவின் உடன்பிறவா சகோதரியான நிருபமா ராஜபக்ஷவின் கணவராவார்.
கடந்த 2014ஆம் ஆண்டு மல்வானையில் பஷில் ராஜபக்ஷ கொள்வனவு செய்த 16 ஏக்கர் காணி, நடேசனின் பெயரிலேயே பதிவுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில், அதுகுறித்து வாக்குமூலம் வழங்குவதற்காக இன்று திங்கட்கிழமை நிதிக்குற்ற விசாரணை பிரிவில் முன்னிலையாகியிருந்த அவர், விசாரணையின் பின்னர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
அவரை பூகொட நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கையை, நிதிக்குற்ற தடுப்புப் பிரிவின் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
குறித்த காணி விவகாரம் தொடர்பாக, இதற்கு முன்னரும் நடேசனிடம் விசாரணை நடத்தப்பட்டிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.
பஷிலுக்குச் சொந்தமானதென நம்பப்படும் மல்வானை காணி தொடர்பான சகல விசாரணைகளும் பூர்த்தியாகியிருந்த நிலையில், இறுதி நேரத்தில் குறித்த காணி தம்முடையதல்லவென நீதிமன்றில் பஷில் தெரிவித்திருந்தார்.
இதனையடுத்து குறித்த காணியை பகிரங்க ஏலத்தில் விடுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.