அவன் கார்ட் விசாரணை அறிக்கையினை, எதிர்வரும் மாதம் சமர்ப்பிக்குமாறு உத்தரவு
அவன் கார்ட் நிறுவனம் தொடர்பான விசாரணை அறிக்கையினை ஒக்டோபர் 05 ஆம் திகதியன்று மன்றில் சமர்ப்பிக்குமாறு காலி பிரதம நீதவான் நிலுபுலி லங்காபுர இன்று வெள்ளிக்கிழமை குற்றப் புலனாய்வு பிரிவினரைப் பணித்தார்.
சமர்ப்பிக்கப்படும் விசாரணை அறிக்கையின் பிரகாரமே மேலதி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
இதேவேளை மிதக்கும் ஆயுதக் களஞ்சியமாகச் செயற்பட்ட அவன் கார்ட் நிறுவனக் கப்பலின் கப்டன் உக்ரேன் நாட்டைச் சேர்ந்த கென்னடி காவ்லோ, எதிர்வரும் 30 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை, தடுத்து வைக்கப்பட்டுள்ள கப்பல் சிதைவடைந்துள்ளதால் அதனை சரி செய்ய வேண்டும் எனவும், எனவே தாமதமின்றி கப்பலை விடுவிக்குமாறும், அவன் கார்ட் கப்பல் நிறுவனத்தின் சட்ட ஆலோசகர் கோரிக்கை விடுத்தார். மேலும், இதற்காக பெருந்தொகை பணம் தேவைப்படுவதாகவும் அவர் கூறினார்.
ஆயுதக் களஞ்சியமாகச் செயற்பட்ட அவன் கார்ட் நிறுவனத்தின் கப்பலை, இலங்கை கடற்படையினர் கடந்தவருடம் ஒக்டோபர் 13 ஆம் திகதி தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.
இதன்போது, கப்பலினுள் ஆயுதங்களும் ரவைகளும் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.