துமிந்த சில்வா உள்ளிட்ட அனைவரும் நிரபராதிகள்; தலைமை நீதிபதி அறிவிப்பு: நேற்றைய நீதிமன்ற நடவடிக்கையின் முழு விபரம்
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் ஜனாதிப தியின் தொழிற்சங்க ஆலோசகருமான பாரத லக் ஷ்மன் பிரேம ச்சந்திர உள்ளிட்ட நால்வரை கடந்த 2011ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 8ஆம் திகதியன்று பிற்பகல் வேளையில் அங்கொடை, ஹிம்புட்டான ஒழுங்கையில் வைத்து சுட்டுக் கொலை செய்த குற்றச்சாட்டில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா உள்ளிட்ட ஐவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து நேற்று தீர்ப்பளித்தது.
கொழும்பு மேல் நீதிமன்றின் சிறப்பு ‘ட்ரயல் அட் பார்’ அமர்வில் ஷிரான் குணரத்ன தலைமையில் பத்மினி ரணவக்க குணதிலக மற்றும் சீ.பீ.எஸ். மொராயஸ் ஆகிய நீதிபதிகள் உள்ளடங்கிய குழுவே இந்த தீர்ப்பை நேற்று அறிவித்தது. வழக்கின் முதல் பிரதிவாதியான பொலிஸ் உத்தியோகத்தர் அனுர டி மெல், மூன்றாவது பிரதிவாதியான தெமட்டகொட சமிந்த எனப்படும் சமிந்த ரவி ஜயநாத், 07 ஆவது பிரதிவாதியான சரத் பண்டார, 10 ஆவது பிரதிவாதியான காணாமல் போயுள்ள ஜனக கலகொட மற்றும் 11 ஆவது பிரதிவாதியான துமிந்த சில்வா ஆகியோருக்கே இவ்வாறு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
இவர்களை ஜனாதிபதி நிர்ணயம் செய்யும் திகதி மற்றும் நேரத்தில் வெலிக்கடை சிறைச்சாலையின் நான்கு சுவர்களுக்குள் உயிர் பிரியும் வரை தூக்கிலிட்டு மரண தண்டனை விதிக்குமாறு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், அப்போதைய ஜனாதிபதியின் தொழிற்சங்க ஆலோசகருமான பாரத லக்ஷமன் பிரேமசந்திரவின் படுகொலை தொடர்பிலான வழக்கின் தீர்ப்பு நேற்று காலை 10.00 மணிக்கு அறிவிக்கப்படுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அதன்படி கொழும்பு மேல் நீதிமன்றின் பாதுகாப்பானது விஷேட அதிரடிப்படை மற்றும் மேலதிக பொலிஸாரின் துணையுடன் பலப்படுத்தப்பட்டிருந்தது.
அனுர டி மெல், சந்தன ஜகத் குமார, சமிந்த ரவி ஜயநாத், லங்கா ரசாஞ்ஜன, மாலக சமீர, விதானகமகே அமில, சரத் பண்டார, சுரங்க பிரேம லால், சமிந்த சமன் குமார, ஜனக கலகொட, துமிந்த சில்வா, ரோஹன மாரசிங்க மற்றும் நாகொட ஆரச்சிகே சமிந்த ஆகிய 13 பேர் இந்த வழக்கின் பிரதிவாதிகளாக சட்டமா அதிபரால் பெயரிடப்பட்டிருந்தனர்.
2011 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 8 ஆம் திகதி அங்கொட ராஹுல வித்தியாலயத்தில் அமைக்கப்பட்டிருந்த வாக்களிப்பு நிலையத்துக்குள் அத்து மீறி அங்கிருந்தவர்களை அச்சுறுத்தியமை, நிவங்கா மதுஷானி பத்திரன என்பவரை தூற்றி அச்சுறுத்தியமை தொடர்பில் பிரதிவாதிகளுக்கு எதிராக சட்ட மா அதிபரால் குற்றச் சாட்டு முன்வைக்கப்பட்டிருந்தது.
அத்துடன் 2011 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 8 ஆம் திகதி அல்லது அதனை அண்மித்த தினமொன்றில் அங்கொடை ராஹுல வித்தியாலய வாக்களிப்பு நிலையத்தில் கடமையில் இருந்த தமித் சுரங்க குமாரவின் மார்பு பகுதியில் கைத்துப்பாக்கியொன்றை வைத்து அச்சுறுத்தியமை அங்கொட ஹிம்புட்டான ஒழுங்கையில் வைத்து சட்ட விரோத குழுவொன்றின் அங்கத்தவராக இருந்து- பாரத லக்ஷமன் பிரேமசந்திர, ஜலாப்தீன் மொஹம்மட் அசீம், மணிவேல் குமாரசுவாமி மற்றும் தமித் தர்ஷன ஜயதிலக ஆகியோரை படுகொலை செய்தமை, ராஜதுரகே காமினி என்பவர் மீது துப்பாக்கி பிரயோகம் செய்து படுகாயம் ஏற்படுத்தியமை, அந் நடவடிக்கைகளுக்கு உதவி ஒத்தாசை புரிந்தமை மற்றும் சதித் திட்டம் தீட்டியமை உள்ளிட்ட 17 குற்றச் சாட்டுக்களின் கீழ் சட்ட மா அதிபரால் மேற்படி பிரதிவாதிகளுக்கு எதிராக குற்றச் சாட்டு சுமத்தப்பட்டிருந்தது.
தண்டனை சட்டக் கோவையின் 146 ஆவது அத்தியாயத்துடன் இணைத்து கூறப்படும் 146,486,296 ஆகிய அத்தியாயங்களின் கீழும் தண்டனை சட்டக் கோவையின் 32 ஆவது அத்தியாயத்துடன் இணைத்து கூறப்படும் 144,296 மற்றும் 486 ஆகிய அத்தியாயங்களின் கீழும் பிரதிவாதிகளால் குற்றம் புரியப்பட்டுள்ளதாக இதன் போது சட்ட மா அதிபரால் மன்றுக்கு அறிவிக்கப்பட்டது.
இது தொடர்பிலான சிறப்பு ட்ரயல் அட் பார் விசாரணைகள் கடந்த 2015 ஒக்டோபர் 12 ஆம் திகதி முதல் ஆரம்பமாகின.
மேல் நீதிமன்ற நீதிபதிகளான ஷிரான் குணரத்ன(தலைவர்), பத்மினி ரணவக்க குணதிலக மற்றும் சீ.பீ.எஸ்.மொராயஸ் ஆகிய மூவர் அடங்கிய ட்ரயல் அட்பார் நீதிபதிகள் குழாம் ஊடாக வழக்கானது மேல் நீதிமன்றின் முதலாம் இலக்க விசாரணை அறையிலேயே இடம்பெற்றது.
இந்நிலையில் நேற்று வியாழக்கிழமை காலை முதலாம் இலக்க விசாரணை அறைக்குள் காலை 9.20 மணி வரை எவரும் உள் நுழைய அனுமதிக்கப்படவில்லை. அதன் பின்னர், குறித்த கொலை வழக்குடன் தொடர்புடையவர்கள், அவர்களது உறவினர்கள், சட்டத்தரணிகள் மற்றும் ஊடகவியலாளர்கள் மட்டும் மன்றுக்குள் அனுமதிக்கப்பட்டனர்.
காலை 10.45 மணியளவில் நீதிமன்ற நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டன. இதன் போது திறந்த மன்றை அழைத்த தலைமை நீதிபதி ஷிரான் குணரத்ன, நீதிபதிகள் மூவரும் தமது தீர்ப்பை தனித்தனியாக அறிவிப்பர் என கூறினார்.
இந் நிலையில் முதலாவதாக தனது தீர்ப்பை நீதிபதி பத்மினி ரணவக அறிவித்தார்.
வழக்கின் 10 ஆவது பிரதிவாதியான ஜனக கலகொட இல்லாமல் குற்றவியல் சட்டத்தின் 241 ஆவது அத்தியாயத்துக்கு அமைவாக சாட்சி விசாரணைகள் இடம்பெற்று இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதாக இதன் போது நீதிபதி பத்மினி ரணவக சுட்டிக்காட்டினார்.
இதனையடுத்து பிரதிவாதிகளின் சட்டத்தரணிகளின் பெயர் பதிவுகள் இடம்பெற்றதுடன் அதன் பின்னர் தீர்ப்பை அறிவிக்கும் நடவடிக்கை ஆரம்பமானது.
நீதிபதி பத்மினி ரணவக அறிவிக்கையில்;
”இந்த வழக்கில் நீண்ட சாட்சி விசாரணைகள் இடம்பெற்றன. அதில் சாட்சியங்கள் பல ஒன்றுக்கொன்று முரண்பட்டதாக இருப்பதை நாம் அவதானித்தோம். எனினும் முன்வைக்கப்பட்டுள்ள சாட்சியங்களின் படி 11 ஆவது பிரதிவாதியின் தலைமையிலேயே, 2011 ஒக்டோபர் மாதம் 08 ஆம் திகதி இடம்பெற்றதாக கூறப்படும் மேற்படி சம்பவம் நடந்துள்ளமை உறுதியாகின்றது. அவரின் தலைமையில் வந்தோரே இந்த சம்பவத்தை அரங்கேற்றியுள்ளனர்.
பாரத லக்ஷமன் உள்ளிட்ட நால்வரின் மரணத்துக்கு ரீ 56 ரக துப்பாக்கியினால் சுடப்பட்டமைதான் காரணம் என்பதும் பல சாட்சியங்கள் ஊடாக தெளிவானது. இதற்காக பயன்படுத்தப்பட்ட துப்பாக்கியும் கைப்பற்றப்பட்டுள்ளது.
சம்பவம் இடம்பெறும் போது 11 ஆவது பிரதிவாதி மது போதையில் இருந்தமையும் சட்ட வைத்திய அதிகாரி உள்ளிட்டோரின் சாட்சியங்களால் உறுதியானது. அத்துடன் தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கியானது விடுதலை புலிகளுக்கும் ராணுவத்துக்கும் இடையில் இடம்பெற்ற போரின் போது காணாமல் போன துப்பாக்கி என்பதும் தெரியவந்தது.
11 ஆவது பிரதிவாதியே குறித்த தினம் இடம்பெற்ற மரணங்களுக்கும் சம்பவங்களுக்கும் முழுப் பொறுப்பு என்பதை முறைப்பாட்டாளர் தரப்பு சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபித்துள்ளது. எனவே 2,4,5,6,8,9,12,13 ஆம் பிரதிவாதிகளை சுமத்தப்பட்டுள்ள அனைத்து குற்றச் சாட்டுக்களில் இருந்தும் நான் விடுவிக்கின்றேன்.” என அறிவித்ததை அடுத்து விடுவிக்கப்பட்ட பிரதிவாதிகள் நீதிமன்றுக்கு வெளியே அனுப்பட்டனர்.
இதனையடுத்து தொடர்ந்தும் நீதிபதி பத்மினி ரணவக தனது தீர்ப்பை வாசித்தார்.
“முதலாவது பிரதிவாதி ஒரு பொலிஸ் உத்தியோகத்தர். எனினும் 12,13 ஆவது பிரதிவாதிகளைப் போன்று செயற்படாது அவர் 11 ஆவது பிரதிவாதியின் அதிகாரத்தை தன்பக்கம் எடுத்து அதன் பால் செயற்பட்டுள்ளார். இதனால் அவருக்கு எதிராக முறைப்பாட்டாளரினால் முன்வைக்கப்பட்ட 1,5,6,7,8,9 மற்றும் 17 ஆகிய குற்றச் சாட்டுக்கள் தொடர்பில் அவரை நான் குற்றவாளியாக அறிவிக்கின்றேன்.
மூன்றாவது பிரதிவாதிக்கு எதிரான குற்றச் சாட்டுக்களும் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபணமாகின்றன. அதன்படி அவரையும் 1,2,3,4,5,6,7,8,9,17 அகிய குற்றச் சாட்டுக்கள் தொடர்பில் நான் அவரை குற்றவாளியாக அறிவிக்கின்ரேன்.
07 ஆவது பிரதிவாதி மீதும் சுமத்தப்பட்டுள்ள 1,2,3,4,5,6,7,8,9,17 ஆகிய குற்றச்சாட்டுக்களும் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதால் அவரையும் இந்த மன்று குற்றவாளியாக காண்கிறது. 10 ஆவது பிரதிவாதிக்கு எதிரான 1,2,3,4,5,6,7,8,9,17 ஆகிய குற்றச் சாட்டுக்கள் தொடர்பிலும் அவரை குற்றவாளியாக கருதுகிறேன். 11 ஆவது பிரதிவாதியே இந்த அனைத்து நடவடிக்கைக்கும் தலைமை தாங்கியவர் என்ற ரீதியில் 1,2,3,4,5,6,7,8,9,17 ஆகிய குற்றச் சாட்டுக்கள் சந்தேகத்துக்கு இடமின்றி அவருக்கு எதிராக நிரூபிக்கப்பட்டுள்ளன. எனவே அவரையும் குற்றவாளியாக நான் கருதுகின்றேன்.
11 ஆவது பிரதிவாதி மீதே முதலில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக அவரது சட்டத்தரணி தமது வாதத்தில் முன்வைத்திருந்தார். அதன்படியே அவரது பாதுகாப்பு பொலிஸார் பதில் தாக்குதல் நடத்தியதாக அவர்கள் வாதிட்டனர். எனினும் கொலை செய்யப்பட்ட பாரத லக்ஷமனிடமும் பொலிஸ் பாதுகாப்பு இருந்துள்ளது. இதனை மிக நன்றாக அறிந்திருந்த நிலையில் பரஸ்பர துப்பாக்கிச் சூடு நடக்க வாய்ப்பு உள்ளதை அறிந்தும் 11 ஆவது பிரதிவாதி அதனை கணக்கில் எடுக்காது பொறுப்பற்று செயற்பட்டுள்ளார். அவை சாட்சியங்கள் ஊடாக உறுதியாகின்றன” என துமிந்த சில்வா உள்ளிட்ட ஐவரை குற்றவாளியாக அறிவித்து தனது தீர்ப்பை அறிவித்தார்.
நீதிபதி பத்மினி ரணவக்கவின் தீர்ப்புடன் தானும் உடன் படுவதாக ட்ரயல் அட் பார் நீதிமன்ற குழாமின் மற்றொரு நீதிபதியான சீ.பீ.எஸ். மொறாயஸும் அறிவித்தார்.
இந் நிலையிலேயே தலைமை நீதிபதி ஷிரான் குணரத்ன தனது தீர்ப்பை வெளியிட்டார். அவர் அதில்;
“தண்டனை சட்டக் கோவையின் அத்தியாயங்களுக்கு அமைய பிரதிவதிகளால் குற்றம் புரியப்பட்டுள்ளமை தொடர்பில் முறைப்பாட்டாளர்கள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபித்துள்ளதாக கொள்ள முடியாதுள்ளது.
இந்த வழக்கை பொறுத்தவரை சுயாதீனமான சாட்சிகளை முன வைக்க முறைப்பாட்டாளர் தரப்பு தவறியுள்ளது.
முறைப்பட்டாளர் தரப்பு நீண்ட இடை வெளியின் பின்னரேயே சாட்சியங்களை மன்றில் பாரப்படுத்தியுள்ளது. அத்துடன் கண் கண்ட சாட்சிகளுக்கு மரண அச்சுறுத்தல் இருப்பதாக கூறப்பட்டாலும் எந்த திகதியில் எங்கு வைத்து எப்போது யாரால் என்பது குறித்து அவர்கள் கூறவில்லை. இதனால் அது குறித்தும் நான் அவதானம் செலுத்துகின்றேன்.
உண்மையிலேயே சந்தேக நபர்கள் தெரிந்துகொண்டே சட்ட விரோத குழுவொன்றின் உறுப்பினர்களாக இருந்தனரா எனும் சந்தேகம் தொடர்பில் அவதானம் செலுத்தப்படுகின்றது. இதன்போது அவர்கள் பொதுவான நோக்கத்துடன் ஒன்று சேர்ந்துள்ளமை தெளிவாகின்றது.
சாட்சிகளுக்கு இடையே பரஸ்பர வேறுபாட்டை அவதானிக்க முடிகின்றது. குறிப்பாக 03 ஆவது பிரதிவாதியின் கைது தொடர்பில் பாரிய சந்தேகம் நிலவுகின்றது. முறைப்பாட்டாளர் தரப்பு, குற்றச்சாட்டுக்களை சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்க தவறியுள்ளது. சாட்சிகள் மீதான சந்தேகங்களை பிரதிவாதிகளுக்கு சாதகமாக வழங்கி அனைத்து பிரதிவாதிகளையும் அனைத்து குற்றச் சாட்டுக்களில் இருந்தும் நான் விடுவிக்கின்றேன்” என அறிவித்தார்.
எனினும் இரு நீதிபதிகள் 05 பேரை குற்றவாளியாக கண்டதை அடுத்து அவர்களுக்கு எதிரான தண்டனை அறிவிக்கப்பட்டது.
தண்டனை அறிவிக்கப்பட முன்னர், குறித்த பிரதிவாதிகளின் சட்டத்தரணிகள் தமதுசேவை பெறுநருக்கு இலகு தண்டனை வழங்குமாறு தனித்தனியாக கருத்தினை முன்வைத்தனர்.
இந் நிலையில் 2: 1 என்ற பெரும்பானமையை அடிப்படையாகக் கொண்டு குற்றவாளியாக காணப்பட்ட 05 பிரதிவாதிகளுக்கும் எதிராக தண்டனை விபரம் அறிவிக்கப்பட்டது. அவர்களுக்கு எதிரான முதவாது குற்றச் சாட்டு தொடர்பில் தலா 06 மாத கடூழிய சிறைத் தண்டனையும் 10 ஆயிரம் ரூபா அபராதமும் விதிக்கப்பட்டதுடன், அபராதத்தைச் செலுத்தாத விடத்து மேலும் மூன்று மாதகால இலகு சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டி வரும் என எச்சரிக்கப்பட்டது.
02 ஆவது குற்றச் சாட்டு தொடர்பில் தலா 02 வருட கடூழிய சிறைத் தண்டனையும் 10 ஆயிரம் ரூபா அபராதமும் விதிக்கப்பட்டதுடன், அபராதத்தைச் செலுத்தாது விடத்து மேலும் மூன்று மாதகால இலகு சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டி வரும் என எச்சரிக்கப்பட்டது.
03 ஆவது குற்றச் சாட்டு தொடர்பில் தலா 02 வருட கடூழிய சிறைத் தண்டனையும் 10 ஆயிரம் ரூபா அபராதமும் விதிக்கப்பட்டதுடன் அபராதத்தைச் செலுத்தாது விடத்து மேலும் மூன்று மாதகால இலகு சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டி வரும் என எச்சரிக்கப்பட்டது.
04 ஆவது குற்றச் சாட்டு தொடர்பில் தலா 02 வருட கடூழிய சிறைத் தண்டனையும் 10 ஆயிரம் ரூபா அபராதமும் விதிக்கப்பட்டதுடன், அபராதத்தைச் செலுத்தாது விடத்து மேலும் மூன்று மாதகால இலகு சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டி வரும் என எச்சரிக்கப்பட்டது.
09 ஆவது குற்றச் சாட்டு தொடர்பில் தலா 20 வருட சிறைத் தண்டனையும் 17 ஆவது குற்றச் சாட்டு தொடர்பில் தலா ஆயுள் தண்டனையும் விதித்து ட்ரயல் அட்பார் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இந் நிலையில் 5,6,7,8 ஆம் குற்றச் சாட்டுக்கள் தொடர்பில் மரண தண்டனை விதிக்கப்பட முன்னர் குற்றவாளிகளான அனுர டி மெல், தெமட்டகொட சமிந்த எனப்படும் சமிந்த ரவி ஜயநாத், சரத் பண்டார, துமிந்த சில்வா ஆகியோரிடம் இறுதியாக மன்றுக்கு ஏதாவது கூறவிரும்புகின்றீர்களா என கேட்கப்பட்டது.
இதற்கு தனித்தனியாக பதிலளித்த நால்வரும், தாம் குற்றச் சாட்டுக்கள் தொடர்பில் நிரபராதிகள் எனவும் சம்பந்தமே இல்லாமல் தாம் குற்றவாறிகளாக ஆக்கப்பட்டுள்ளதாகவும் கூறினர்.
இதனையடுத்து நீதிபதி பத்மினி ரணவக்க மரண தண்டனை தீர்ப்பினை வாசித்தார். இதன் போது நீதிமன்றில் அனைவரும் எழுந்து நின்றதுடன் அனைத்து மின் குமிழ்களும் அணைக்கப்பட்டன.
“இலங்கை சோஷலிசக் குடியரசின் ஜனாதிபதி நிர்ணயம் செய்யும் திகதியில் மற்றும் நேரத்தில், வெலிக்கடை சிறைச் சாலையின் நான்கு சுவர்களுக்குள் வைத்து குற்றவாளிகளான அனுர டி மெல், சமிந்த ரவி ஜயநாத், சரத் பண்டார, ஜனக கலகொட, துமிந்த சில்வா ஆகியோரை உயிர் பிரியும் வரை தூக்கிலிட்டு கொல்லவும்” என தீர்ப்பறிவித்து தீர்ப்பெழுதிய பேனையை உடைத்தெறிந்தார்.