சகீப் சுலைமான் கொலை; சந்தேக நபர்களை 15 ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவு
பம்பலப்பிட்டி வர்த்தகர் முகம்மட் சகீப் சுலைமான் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் எட்டுப் பேரையும் எதிர்வரும் 15 ஆம் திகதி வரை, விளக்க மறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றம் இன்று திங்கட்கிழமை உத்தரவிட்டது.
சந்தேக நபர்கள் சேதாவத்தை, வெல்லம்பிட்டிய, கொழும்பு 12 மற்றம் 14 உள்ளிட்ட பிரதேசங்களை வசிப்பிடமாகக் கொண்டவர்களாவர்கள்.
சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கையின்படி, தட்டையான ஆயுதம் ஒன்றினால் தாக்கப்பட்டமையினால், சகீப் சுலைமான் உயிரிழந்துள்ளார் என்று, கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இன்றைய தினம் நீதிமன்றுக்குத் தெரிவித்திருந்தனர்.
கொலை செய்யப்பட்ட சகீப் சுலைமானிடம் 08 வருடங்களுக்கும் மேலாக, நம்பிக்கையின் அடிப்படையில் கடைமையாற்றி வந்த நபர் ஒருவரே, இந்த பிரதான சந்தேக நபராவார் என்பது குறிப்பிடத்தக்கது.