மு.கா. உயர்பீடக் கூட்டமும், வெட்கக் கேடான விடயங்களும்: திட்டமிட்டு தடுக்கப்பட்டாரா பசீர்

🕔 August 24, 2016

SLMC - 011– ஏ.எச். சித்தீக் காரியப்பர் –

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அரசியல் உயர்பீடக் கூட்டம் நேற்று செவ்வாய்கிழமை இரவு இடம்பெற்றது. குறித்த கூட்டமானது கட்சியில் உள்ள அதிருப்தியாளர்கள் மற்றும் நியாயத்துக்காகப் பேராடுபவர்களின் ஜனநாயக உரிமைகளை மறுதலிப்பதாகவே அமைந்திருந்தது. கருத்துச் சுதந்திரம் மறுக்கப்பபட்ட நிலையில் கூவி விற்கும் மீன் சந்தையில் எழும் சத்தம் போல் காணப்பட்டுள்ளது.

தங்களது கருத்தை வெளியிடும் சுதந்திரம் மாற்றுக் கருத்தாளர்களுக்கும் மறுக்கப்படக் கூடாது என்ற பொதுவியல் இந்தக் கூட்டத்தில் திட்டமிட்டு புறந்தள்ளப்பட்டுள்ளது. இன்றைய கூட்டத்தில் கட்சியின் தவிசாளர் பஷீர் ஷேகு தாவூத் தொடர்பான விடயமே பெரிதாகப் பேசப்பட்ட நிலையில், அவர் தன்னிலை வாதத்தை முன்வைப்பதற்கான சந்தர்ப்பம் அடாவடித்தனமான முறையில் பலாத்காரமாக ஏலவே பேசி திட்டமிட்ட முறையில் மறுக்கப்பட்டது வெட்கக் கேடானது.

கொழும்பு வெக்க்ஷோல் வீதியில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைமையகமான தாருல் ஸலாம் கட்டடம் மற்றும் அதன் ஊடாக கிடைக்கும் வருமானம் தொடர்பில் கட்சியின் தவிசாளர் பஷீர் ஷேகு தாவூத் பகிரங்கமாக ஊடகங்களுக்கு வெளியிட்ட விடயங்கள் தொடர்பில் கட்சியின் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்கள் கருத்துகளை முன்வைத்தார். இது தொடர்பில் சுமார் அரை மணி நேரமாக தன்னிலை வாத்தை ஹக்கீம் முன்வைத்துள்ளார். இறுதியாக அவர் இவ்வாறான விடயங்களை ஊடகங்களில் வெளிபடுத்துவதனைத் தவிர்த்துக் கொள்ளுமாறும் பிரச்சினைகள் இருந்தாலும் எமக்குள் பேசித் தீர்ப்போம் என்றும் தெரிவித்தார்.

இதனையடுத்து கட்சியின் தவிசாளர் பஷீர் ஷேகு தாவூத் தனது கருத்துகளை முன்வைப்பதற்காக எழுந்த போது, மிக மோசமான இடையூறுகள் அங்கு ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஜனநாயகப் பண்பு, கருத்துத் தெரிவிக்கும் உரிமைகள் மறுக்கப்பட்டு அவரைப் பேச விடாமல் பலர் தடுத்துள்ளனர்.

கட்சியின் தவிசாளர் பஷீர் ஷேகு தாவூத் எழுந்து தலைவரான ஹக்கீமை நோக்கி, குறித்த விடயம் தொடர்பில் தன்னால் முன்வைக்கப்பட்ட கேள்விகளுக்கு நீங்கள் சரியான பதிலைத் தரவில்லை என்று கூறியது மட்டும்தான்.. உடனடியாக அங்கிருந்த தவம், பழீல், மன்சூர், லாஹிர் உட்பட மற்றும் பலர் பஷீரை பேசவிடாமல் தடுத்துள்ளனர். பஷீர் ஷேகு தாவூத் எவ்வளவோ முயற்சி செய்தும் அவரால் பேச முடியாதவாறு குறித்த நபர்கள் கூச்சலிட்டு இடையூறுகளை ஏற்படுத்தியுள்ளனர்.

இந்நிலையில் கட்சியின் தலைவரான அமைச்சர் ஹக்கீம் அவர்கள், பஷீரை பேச விடுங்கள் என்றும் பலமுறை கேட்டுக் கொண்டும் குறித்த நபர்கள் பஷீர் உரையாற்றுவதனை முழுமையாகத் தடுத்துள்ளனர். இந்தச் சந்தர்ப்பத்தில் அமைசச்ர் ஹக்கீம் எழுந்து கூட்டத்தை உடன் முடிவுக்கு கொண்டு வருவதாக தெரிவித்து விட்டு வெளியேறிச் சென்றுள்ளார்.

கட்சியின் தலைவரான அமைச்சர் ஹக்கீம் அவர்கள் பஷீரை பேச விடுங்கள் என்று பலமுறை கேட்டுக் கொண்டும் அதனை மீறி குறித்த நபர்கள் இடையூறு ஏற்படுத்தினார்கள் என்றால் எங்கே கட்சியின் தலைமைத்துவக் கட்டுப்பாடு? இன்றேல் இது ஒரு திட்ட நடவடிக்கையா? அப்படியாயின் பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டுவதாக அல்லவா அமைந்து விடும்?

ஒரே கட்சியைச் சேர்ந்தவர்களிடையே கருத்து மோதல்கள் முரண்பாடுகள் காணப்படலாம். ஆனால் அவற்றைப் பேசித் தீர்க்கவும் தன்னிலை வாதத்தை முன்வைக்கவும் கட்சிக்குள் ஜனநாயகம் நிலவ வேண்டும். ஆனால், இன்று முஸ்லிம் காங்கிரஸுக்குள் இவை கூட இல்லாமல் போனமை வெட்க கேடான விடயம்.

பிரச்சினைகள் வந்தால் எமக்குள் பேசித் தீர்ப்பபோம் என்று ஹக்கீமும் கூறியுள்ளார். ஆனால் சிஷயர்கள் அதற்கு வழி விடுவதாக இல்லை.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்