பதிலளிக்காமல் உளறிக் கொண்டிருந்தால், ஆவணங்களை வெளியிடுவேன்: மு.கா. தவிசாளர் பசீர்

🕔 August 5, 2016

Basheer - 03111ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் சொத்துக்கள் தொடர்பில், தான் முன்வைத்துள்ள கேள்விகளுக்கு, அந்தக் கட்சியின் தலைவர் தொடர்ந்தும் மேடை உளறல்களைப் பதில்களாக வழங்கிக் கொண்டிருந்தால், கட்சியின் சொத்துக்கள் தொடர்பில் தன்னிடமுள்ள ஆச்சரியம் தரும் ஆவணங்களை வெளியிடப் போவதாக, மு.காங்கிரசின் தவிசாளர் பசீர் சேகுதாவூத் தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு அவர் விடுத்துள்ள அறிக்கையொன்றின் மூலமாக, அவர் இதை கூறியுள்ளார்.

அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது;

இரண்டு மாதங்களுக்கு முன்னர் கட்சியின் தலைமையகமான தாருஸ்ஸலாம் பற்றியும், சொத்துக்கள் பற்றியும் தலைவரிடம் நான் எழுப்பியிருந்த கேள்விகள் தொடர்பாக, எவ்வித பதில்களும் தரப்படாத நிலையில், மூன்று வலுவற்ற பதில் கேள்விகளும், ஓர் அர்த்தமற்றஅபிப்பிராயமும் மக்கள் அரங்கத்தில் வைக்கப்பட்டுள்ளன.

01) இத்தனை காலமும் தாருஸ்ஸலாம் பற்றிய கேள்விகளை ஏன் கேட்கவில்லை.

02) இந்தப் பரம ரகசியங்கள் இத்தனை காலங்கள் எங்கு மறைந்து கிடந்தன.

02) ஒரேயடியாக புற்றுக்குள்ளிருந்து இத்தனை பாம்புகள் எவ்வாறு வெளிவந்தன.

ஆகிய மூன்று கேள்விகளும்;

எந்தக் கேள்விகளுக்கும் பதிலளித்து நாம் நேரத்தை வீணடிக்கத் தேவையில்லை என்ற கருத்துமே முன்வைக்கப்பட்டவையாகும்.

தலைவர் அஷ்ரஃப் மரணமடைந்த காலம் தொட்டு, 2015ஆம் ஆண்டுவரை, தாருஸ்ஸலாம் சொத்துக்கள் பற்றிய வினாக்கள் கேட்கப்பட்டே வந்துள்ளன. ஆனால் இன்று தென்படும் அளவுக்கு – கட்சிச் சொத்துக்கள் தொடர்பான விபரங்கள் தெளிவாக கட்சி உயர்பீட உறுப்பினர்களுக்கோ,பொதுமக்களுக்கோ தெரிந்திருக்கவில்லை. அந்தக் கட்சிச் சொத்துக்களில் தனிநபர் ஒருவரின் தலையீடு காரணமாக, சிக்கல்கள் இருக்கின்றன, அஷ்ரஃபின் மரணத்தோடு அவை களவாடப்பட்டு ஏதோ புற்றுக்குள் ஒளித்து வைக்கப்பட்டுள்ளன என்றே பொதுத்தளத்தில் அபிப்பிராயங்கள் நிலவிவந்தன.

தாருஸ்ஸலாம் பற்றியும், கட்சியின் சொத்துக்கள் பற்றியும் முழுத்தகவலும் தெரிந்திருந்தவரும், அஷ்ரஃபோடு இணைந்து லோட்டஸ் என்ற நம்பிக்கை நிதியத்தின் யாப்பை வரைந்தவரும், கட்சிச் சொத்துக்களின் உறுதிகளையும் தலைவரின் தனிப்பட்ட சொத்துக்களின் உரிமையையும், தலைவரின் சில கம்பனிப் பங்குகளையும் நிதியத்தோடு இணைப்பதற்கு – சட்ட ஆலோசகருமாக விளங்கிய நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி சல்மானுக்கே இவ்விடயம் சம்பந்தமான தகவல்களும், இந்தச் சிக்கலை முடிவுறுத்துவதற்கான மார்க்கங்களும் தெரிந்திருந்தன.

மேற்படி விடயம் தெரிந்திருந்த இருவரில் ஒருவரான தலைவர் அஷ்ரஃப் மரணித்ததன் பின்னர், சொத்துக்கள் பற்றிய விளக்கங்களை மக்களுக்குப் பகிரங்கப் படுத்தியிருக்க வேண்டியதும், கட்சிச் சொத்துக்களை மீட்பதற்கான சட்டவழி முறைகளைக்  கையாண்டிருக்க வேண்டியதும் – சல்மானையும், சல்மான் வழங்கிய தகவல்களினூடாக அனைத்து ரகசியங்களையும் அன்றே தெரிந்திருந்த இன்றைய தலைவர் ரவூப் ஹக்கீமையுமே சாரும். இவ்விருவரும் இந்த ரகசியங்களை 16 வருடங்களாக வெளியிடாதிருந்ததுதான், இவ்வளவு காலமும் தாருஸ்ஸலாம் பற்றிய கேள்விகளைக் கேட்க முடியாதிருந்தமைக்கும், தற்போது கேட்க நேர்ந்திருப்பதற்கும் பிரதான காரணமாகும்.

2015.10.15 அன்று, கட்சியின் பிரதித் தவிசாளரும் அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்களின் பிரத்தியேக செயலாளருமான நயீமுல்லாஹ் தலைமையில் 12 உச்சபீட உறுப்பினர்கள் கையெழுத்திட்டு, அனைத்து உச்சபீட உறுப்பினர்களுக்கும் பிரதியிட்டு கட்சித் தலைமைக் கட்டிடம் சம்பந்தமான விபரங்களை அதியுச்ச பீடத்திற்குச் சமர்ப்பிக்க வேண்டும் என்று கோரிக்கை விடப்பட்ட கடிதத்தின் பின்னர்தான், இவ்விடயம் பற்றி ஆராய வேண்டும் என்று முடிவெடுத்தேன். இவ்வுறுப்பினர்களின் கேள்விகளுக்கு உச்சபீடக் கூட்டத்தில் சல்மானும் தலைவரும் பதிலளித்தபோது, அப்பதில்கள் என்னையும் இன்னும் சில உறுப்பினர்களையும் திருப்திப்படுத்தாமையைத் தொடர்ந்து, சொத்துக்கள் தொடர்பானஆவணங்களை தீவிரமாகத் தேடத் தொடங்கினேன்.

சவால்களுக்கு மத்தியிலான 08 மாதங்கள்தொடர்ந்த தேடலில் ஆவணங்கள் அனைத்தையும் பெற்றுக்கொண்டேன். இவ் ஆவணங்களை ஆராய்ந்தபோது அவற்றில் காணக்கிடைத்த உண்மைகள், இத்தனை காலமும் தவிசாளராக இருந்த என்னையே ஆச்சரியத்துக்குள்ளாக்கியது. எனவே, கிடைக்கப்பெற்ற ஆவணங்களை ஆதாரமாக வைத்துக் கொண்டு, ஏற்கனவே 12 உறுப்பினர்களால் கேட்கப்பட்ட கேள்விகளை விடவும் காத்திரமான 12 கேள்வித் தொகுதிகளைத் தயாரித்திருந்தேன்.

இக்கேள்விகளை எழுப்ப ஏன் இவ்வளவு காலம் எடுத்தது என்பதையும், இந்தப் பரம ரகசியங்கள் ஏன் மறைந்து கிடந்தன என்பதையும், ஒரேயடியாக புற்றுக்குள்ளிருந்து இத்தனை பாம்புகள் எவ்வாறு வெளிவந்தன என்பதையும் மக்கள் புரிந்து கொள்வார்கள் என்று நம்புகிறேன்.

அதேநேரம், இத்தனை காலங்களாக ஏன் இந்தக் கேள்விகள் கேட்கப்படவில்லை என்று கேட்பவர்கள், கேள்விகள் கேட்கப்பட்டும்கூட  – உரிய பதில்கள் தரப்படாது இழுத்தடிக்கப்படுவதையும், திசை திருப்பும் வகையிலான கருத்துக்களே பதிவு செய்யப்பட்டு வருகின்றன என்பதையும் கவனிக்க வேண்டும்.

கேள்விகளுக்குப் பதிலளித்து நேரத்தை வீணடிக்க வேண்டியதில்லை என்பதானது, மேலோட்டமான பார்வையில் ரசிக்கும்படியாக இருந்தாலும், கட்சி ஒன்றின் தலைவர் உறுப்பினர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்கவும், கட்சி தொடர்பான விபரங்களைப் பகிரங்கப்படுத்தவும் கடமைப்பட்டவர் என்பதையும், அது அவரது பொறுப்புகளில் ஒன்றென்பதையும் தலைவர் மறந்துவிட்டார் என்பது மட்டுமல்ல, சொத்து விபரங்களை மறைப்பதற்கு பொடுபோக்குத்தனமாகக் கருத்துப் பரிமாறி தப்பிப்பதையுமே தெளிவு படுத்துகின்றது.

இனிமேலும் எனது கேள்விக்கான பதில்கள் மேடை உளறல்களாக, அல்லது தகுந்த உத்தியோகபூர்வமானதாக இல்லாதவிடத்து, என்னிடமுள்ள ஆவணங்களையும், கட்சிச் சொத்துக்கள் தொடர்பான – இலங்கையின் உயர் சட்டநிபுணர்களின் கருத்துக்களையும் வெளியிட்டு, மக்களே பதில்களைத் தீர்மானிக்கும்படி செய்வேன் என்பதைக் கூறிவைக்க விரும்புகிறேன்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்