வலை திருடிய உதவிப் பணிப்பாளருக்கு விளக்க மறியல்
– எப். முபாரக் –
பயனாளிகளுக்கு வழங்கப்படவிருந்த மீன்பிடி வலைகளைத் திருடிய கடற்றொழில் – நீரியல் வளங்கள் திணைக்களத்தின் திருகோணமலை உதவிப் பணிப்பாளரை, எதிர்வரும் 28ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற நீதவான் டி.சரவணராஜா, நேற்று வியாழக்கிழமை உத்தரவிட்டார்.
திருகோணமலை உதவிப் பணிப்பாளரான 45 வயதுடைய உபாலி சமரதுங்க என்பவரையே விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதா பொலிஸார் தெரிவித்தனர்.
திருகோணமலை மீன்பிடித் திணைக்களத்தில் மீனவர்களுக்கு பகிர்ந்தளிக்கப்படவிருந்த 04 லட்சத்து 26ஆயிரம் ரூபாய் பெறுமதியான மீன்பிடி வலைகள் களஞ்சியசாலையிலிருந்து திருடப்பட்டிருப்பதாக, களஞ்சியப் பொறுப்பாளரினால் திருகோணமலை தலைமையகப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
அம்முறைப்பாட்டினையடுத்து பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில் உதவிப் பணிப்பாளரினால் அவை திருடப்பட்டமை தெரியவந்துள்ளது.
அதனையடுத்து பொதுச் சொத்துக்களைத் திருடிய குற்றச்சாட்டின் பேரில் நபரை பொலிஸார் கைது செய்து, நீதிமன்றில் ஆஜர் செய்தனர்.