மனசாட்சிக்கு விரோதமாக செயற்பட தயாரில்லை; அமைச்சர் பைசர் முஸ்தபா
எல்லை நிர்ணயம் தொடர்பில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு எட்டப்பட்டால், அடுத்த வருட ஆரம்பத்தில் உள்ளுராட்சித் தேர்தல்களை நடத்தப்படுவதற்கு வாய்ப்பு உள்ளது என்று மாகாண சபைகள் உள்ளூராட்சி சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை தோற்கடித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு, உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வெற்றி பெறுவது ஒரு பாரிய விடயமல்ல எனவும் அவர் கூறினார்.
நீர்ப்பாசன திணைக்களத்தில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையில் அவர் இவ்வாறு இதனைக் குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் கூறுகையில்;
“அச்சம் காரணமாகவே உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களை அரசாங்கம் பிற்போடுவதாக ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் குறை கூறி வருகின்றனர்.
ஏற்கனவே வரையறை செய்யப்பட்ட எல்லைகளை மீள் நிர்ணயம் செய்யும் போதுதான் சிக்கல்கள் அதிகமாகக் காணப்படுகின்றன. இதனடிப்படையில் பிரச்சினைகளுக்கு தீர்வு எட்டப்பட்டால், அடுத்த வருட ஆரம்பத்தில் தேர்தல் நடத்தப்படுவதற்கு வாய்ப்பு உள்ளது.
ஏற்கனவே மேற்கொள்ளப்பட்ட எல்லை நிர்ணயங்கள் பக்கச் சார்பானவை. இதனை ஏற்றுக் கொள்ள முடியாதென அனைத்து கட்சிகளினதும் பிரதிநிதிகள் வெளிப்படையாக கூறியிருந்தனர். இந்த எல்லை நிர்ணயங்களை அடிப்படையாகக் கொண்டு தேர்தலை நடத்தினால், ஒருசில சமூகத்தவர்களுக்கு மாத்திரமே சாதகமாக அமையும்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை உடன் நடத்துமாறு ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் செயலாளரிடமிருந்து தொடர்ச்சியாக அழுத்தம் கொடுக்கப்படுகிறது. எனினும், மனசாட்சிக்கு விரோதமாக கட்சியின் நிகழ்ச்சி நிரலுக்குக் கட்டுப்பட்டு செயற்பட நான் தயாரில்லை. கட்சியின் வெற்றியை மாத்திரம் கருத்திற் கொண்டு செயற்பட்டால் அது சிறுபான்மை இன மக்களுக்கு இழைக்கும் பாரிய துரோகமாகிவிடும்” என்றார்.